ஷா ஆலாம், 13 ஆகஸ்ட்: நேற்று மாலை இங்குள்ள கிள்ளான், தாமான் பாயு பெர்டானா, ஜாலான் பத்து உன்ஜூர் 9-இல் உள்ள மூன்று மாடி கடைவீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் ஒருவரும் அவரது எட்டு வயது மருமகனும் (சகோதரியின்/சகோதரனின் மகன்) உயிரிழந்தனர்.
மேலும் இருவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர் என சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு , மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுத் துணை இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
நேற்று மாலை 6.33 மணிக்கு தீயை அணைக்கும் பணி முடிந்த பிறகு, 66 வயதுடைய முதியவர் மற்றும் எட்டு வயது சிறுவன் ஆகிய இருவரின் உடல்களும் அந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள இரண்டு தனித்தனி கழிவறைகளில் கண்டெடுக்கப்பட்டன.
மாலை 5.51 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துவிட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். அதே வேளையில், மற்ற இருவர் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு (HTAR) அனுப்பப்பட்டனர்," என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இரவு 10.15 மணிக்கு அரச மலேசிய போலீஸ் படையின் தடயவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஷ்ருல் ரிசால் கூறினார்.
கிள்ளான் துறைமுக தீயணைப்பு நிலையம் மற்றும் அண்டாலாஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 18 பணியாளர்களின் பங்களிப்புடன் இந்த மீட்பு நடவடிக்கை இரவு 10.05 மணிக்கு முழுமையாக நிறைவடைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.



