ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 - தலைநகரில், அடுக்குமாடி குடியிருப்பில் தைவான் நாட்டைச் சேர்ந்த யூடியூபர் (யூடியூப் காணொளிப் படைப்பாளி) ஒருவரைக் கும்பலாக கொள்ளையிட்டது, போலிசாரைப் போன்று வேடமிட்டது ஆகிய குற்றச் செயல்களுக்காக , போலீசார் 12 பேரைக் கைது செய்தனர்.
தமது முதலாளி கொள்ளையிடப்பட்டதாக 43 வயது ஜப்பானிய நாட்டவரிடமிருந்து இம்மாதம் ஆகஸ்ட் முதலாம் தேதி போலீஸ் புகார் பெற்றதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரான 38 வயது தைவானிய யூடியூபர் , காயம் ஏற்படும் வரையில் தாக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டார்.
அந்த கொள்ளைச் சம்பவத்தில் அந்நபருக்கு 35,000 ரிங்கிட் வரையில் நட்டம் ஏற்பட்டது.
அந்த யூடியுபர் ரொக்கமும் , அதிக மதிப்புடைய வெளிநாட்டு நோட்டுகளையும் வைத்திருந்ததை அறிந்தே , கைதான நபர்கள் அவரை கொள்ளையிட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக ஃபாடில் மர்சுஸ் கூறினார்.
புகாரை அடுத்து, கொள்ளையிட்ட நபர்களைப் பிடிப்பதற்காக, செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு பிரிவு, கோலாலம்பூர் குற்றப் புலனாய்வு துறையுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
அந்த கைது நடவடிக்கையின் வாயிலாக 26 வயதிலிருந்து 48 வயது மதிக்கத்தக்க எட்டு ஆடவர்களும், நான்கு பெண்களும் கைதாகினர்.
அவர்களில் எழுவர் விசாரணைக்குப் பின்னர், இம்மாதம் ஆகஸ்ட் 7 -ஆம் தேதி போலீஸ் உத்தரவாதத்தில் விடுவிக்கப்பட்டனர். மேலும் ஐவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.



