சுபாங், ஆகஸ்ட் 8: சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (PLATS) உதவித் திட்டம், தொழில்முனைவோர்களைக் கௌரவிக்கும் வகையில், 'சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் விருது ' ( Malam Anugerah Platform Selangor-MAPS)விழாவை நடத்தியது.
தொழில்முனைவோரின் சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு (UPEN), மந்திரி பெசார் சிலாங்கூர் கழகம் (MBI) ஊராட்சி அமைப்புகள் (PBT) ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாக மூன்றாவது முறையாக இந்த விழா நடத்தப்பட்டது.
சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய குறுந்தொழில் முனைவோரைக் கொண்டாடும் வகையில், மந்திரி பெசார் சிலாங்கூர் அறக்கட்டளை (YMBI) இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
புதுமை, டிஜிட்டல் மயமாக்கல், சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் இளைஞர் தலைமைத்துவம், மற்றும் வணிகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட ஒன்பது விருதுப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 23 அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன.
'மினா சத்தே' (Minah Satay) நிறுவனரான நர்மினா சஃப்ரியால், 'சிலாங்கூர் மாநிலத்தின் முதன்மை குறுந்தொழில் முனைவோர் விருதை' (Anugerah Utama Usahawan Mikro Negeri Selangor) வென்றார்.
அவர் கிண்ணம் 5,000 ரிங்கிட் ரொக்கம் ,15,000 ரிங்கிட் சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதி உள்ளிட்ட மொத்தம் 20,000 ரிங்கிட் மதிப்புள்ள பரிசுகளைப் பெற்றார்.
இந்த இரவு விருதளிப்பு விழாவில், சமூக குறுந்தொழில் முனைவோர் விருது, இளம் குறுந்தொழில் முனைவோர் விருது, தொழில்நுட்ப புரட்சி குறுந்தொழில் முனைவோர் விருது மற்றும் பெண் குறுந்தொழில் முனைவோர் விருது ஆகியவையும் வழங்கப்பட்டன.
மேலும், புதுமை குறுந்தொழில் முனைவோர் விருது, U-PLATS டிஜிட்டல் சிறந்த தொழில்முனைவோர் விருது, U-PLATS ஹலால் சிறந்த விருது மற்றும் PLATS நிதியுதவி சிறந்த தொழில்முனைவோர் விருது ஆகியவையும் வழங்கப்பட்டன.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் மாநில அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, அரசாங்கம், தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் சமூகத்தை இணைக்கும் ஒரு தளமாக PLATS செயல்படுகிறது.
இவை அனைத்தும் இணைந்து ஒரு முற்போக்கான, உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகின்றன.
இதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தொழில்முனைவோரின் வருமானத்தை உயர்த்தவும், சிலாங்கூர் மாநிலத்திற்கு நீடித்த சமூக-பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது.



