ஷா ஆலம், ஆகஸ்ட் 3: கிள்ளான் அரச மாநகர் மன்ற (MBDK) நடவடிக்கையின் போது "ரோக்கி" (Rocky) என்ற நாய் உயிரிழந்தது தொடர்பான விசாரணை அறிக்கை, விரைவில் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்பிக்கப்படும்.
இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் முழுமையாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளுக்காக இந்த விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படுமென தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் லிம் ஜிட் ஹுய் தெரிவித்தார்.
எந்தவொரு தரப்பிற்கும் சாதகமாக இல்லாமல், இந்த விசாரணை முற்றிலும் நியாயமாகவும், வெளிப்படையான முறையிலும், நடத்தப்படும் என்று நாங்கள் முழு உத்தரவாதம் அளிக்கிறோம்," என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதனிடையே,நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) இரவு சுமார் 10.15 மணியளவில் தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு முன்னால் ஒரு குழுவினர் ஒன்று திரண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் தெரு நாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது ரோக்கி என்ற நாய் உயிரிழந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, "ரோக்கிக்கு நீதி" (Justice for Rocky) என்ற கருப்பொருளில் அந்தப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது என்று அவர் கூறினார்.
"இது தொடர்பாக, பொதுமக்கள் எப்போதும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்றும், அரசு வளாகங்கள் அல்லது கட்டிடங்களுக்கு முன்னால் ஒன்று கூட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில் இத்தகைய நடவடிக்கைகள் பொதுச் சேவைகளின் அன்றாட செயல்பாடுகளையும், சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்தையும் பாதிக்கும்," என்றாரவர்.



