ஷா ஆலாம், ஜூலை 28: கடந்த ஜூலை 15-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பெரிய கூட்டு நடவடிக்கையின் மூலம், ஜொகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் (Forest City) செயல்பட்டு வந்த இரு இணைய மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.
அந்நடவடிக்கையின் போது, 335 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டினர் ஆவர்.
கைது செய்யப்பட்டவர்களில் 309 சீன நாட்டினர், 19 இந்தோனேசியர்கள், நான்கு மியான்மர் நாட்டினர் மற்றும் மூன்று உள்ளூர்வாசிகள் அடங்குவர் என்று ஜொகூர் போலீஸ் தலைவர் அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.
இந்த 335 பேரும் 20 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
ஃபாரஸ்ட் சிட்டியில், மோசடி அழைப்பு மையங்களாக (call centre) செயல்பட்டு வந்த 27 அடுக்குமாடி குடியிருப்புகளையும் ஐந்து பங்களாக்களையும் அதிகாரிகள் சோதனையிட்டதாக ரஹ்மான் தெரிவித்தார் .
கைதான மோசடி கும்பல்கள் கிரிப்டோகரன்சி முதலீடுகள் மற்றும் காதல் மோசடிகள் (love scams) போன்ற இணைய மோசடிகளை நடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இந்த மோசடி கும்பல்களால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக சீனா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆவர்.
இந்த சோதனையின் போது போலீசார் 313 கணினிகள், 1,557 கைபேசிகள், 17 மடிக்கணினிகள் , 10 மோடம்களைப் (modem) பறிமுதல் செய்தனர்.
இந்தக் கும்பல்களுக்குப் பின்னனியில் இருந்து செயல்படும் முக்கிய நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணியில் போலிஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அப் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார்.
கடந்த வாரம் மூடப்பட்ட ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள நெட்வொர்க் ஸ்கூல் (Network School) நிறுவனத்துக்கும் இந்த மோசடி கும்பல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.







