ஷா ஆலாம், ஜூலை 26: உலக சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, குவாலா லங்காட், கெலானாங் கடற்கரையில் (Pantai Kelanang) 700 கண்டல் வகை (Rhizophora apiculata) மரக்கன்றுகள் நடப்பட்டன.
கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஒன்றாக இந்த மரநடவு செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கெலானாங் கடற்கரையில் நடப்பட்ட ஒட்டுமொத்த சதுப்புநில மரங்களின் எண்ணிக்கை தற்போது 12,000-ஐ எட்டியுள்ளது என குவாலா லங்காட் நகராட்சி மன்றம் (MPKL) தெரிவித்தது.
சதுப்புநில சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என அம்மன்றம் தெரிவித்தது.
முன்னதாக கண்டல் மரக் கன்றுகளை நடும் நடவடிக்கையை தேசிய ஒற்றுமை அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஹஸ்லினா அப்துல் ஹமீத் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அந்நடவடிக்கையில் பல்வேறு அரசு நிறுவனங்கள்,முக்கிய பங்காளித்துவ நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் , உள்ளூர் சமூகம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.
சதுப்புநில மரங்களை நடுவது கடற்கரை அரிப்பைக் குறைப்பதற்கும், கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் உதவுகிறது; அதோடு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இயற்கையான அரணாகவும், கடலோர சுற்றுச்சூழலின் சமநிலையைப் பேணவும் உதவுகிறது என்றும் குவாலா லங்காட் நகராட்சி மன்றம் தெரிவித்தது.






