கோத்தா திங்கி, ஜூலை 26 — முதலீட்டு மோசடி ஒன்றில் சிக்கிய 58 வயது இல்லத்தரசி , 1 லட்சத்து 19ஆயிரத்து 599 ரிங்கிட் தொகையை இழந்தார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் ஃபேஸ்புக்கில் ‘எக்ஸ்எம் ராயல்’ (XM Royal) என்ற முதலீட்டுத் திட்டத்தின் விளம்பரத்தைக் கண்டு அதில் இணைந்தார் என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டண்ட் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
இந்த மோசடி கும்பல், 300 ரிங்கிட் என்ற மிகக் குறைந்த தொகையில் முதலீட்டுத் தொகுப்புகளை வழங்கி, இரண்டே மணி நேரத்தில் 15 ஆயிரம் ரிங்கிட் வரை லாபம் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியுள்ளனர்.
"இதனை நம்பிய அந்தப் பெண், தனது முதலீட்டு லாபத்தை எடுப்பதற்காக, கடந்த ஜூலை 19 முதல் கடந்த வியாழக்கிழமை வரை, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 8 முறை மொத்தம் RM119,599.24 தொகையை அனுப்பியுள்ளார்" என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை போலிசில் புகார் செய்தார்.



