ஷா ஆலாம், ஜூலை 23 — தாமான் ஜாத்தி, பத்து 17-இல் உள்ள ‘தாமான் தாசிக் ரேக்ரியாசி துன் பேராக்’ கைவிடப்பட்ட சுரங்கக் குளத்தில் நேற்று காலை ஆடவர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து காலை மணி 7.45 அளவில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகக் கோம்பாக் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், குளத்தின் மேற்பரப்பில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டவர் உள்ளூர் சீன ஆடவர் என்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உயிரிழந்தவரின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவுமில்லை என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் செலாயாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை முழுமையாகக் கிடைக்கும் வரை, இச்சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், அது விசாரணையைப் பாதிக்கக்கூடும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் ரவாங் காவல் நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் ஜாரிஃப் ஜகாரியாவை 03-6091 6222 எனும் எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையக கட்டுப்பாட்டு அறையை 03-6126 2222 எனும் எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



