பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21 : லங்காவி, குவாவில் உள்ள ஒரு பழைய கோவிலில் இந்துக்களின் புனிதப் பொருளை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து, சர்ச்சைக்குரிய ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் விசாரணைக் கோரியுள்ளார்.
லங்காவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மஜிஸ்திரேட் ஹெமி அன்னெரினா ஹாஜா மைதின் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, 34 வயதான தமீம் தம் மீதான அந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
கடந்த மார்ச் 8-ஆம் தேதி, செலாட் பாஞ்சோரில் உள்ள பழைய ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலில் இருந்த "திரிசூலத்தை", இந்து மதத்தை அவமதிக்கும் என்ற முழு அறிவோடு தமீம் சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295-ன் கீழ் தமீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மஜிஸ்திரேட், தமீமிற்கு இரு உத்தரவாளர்களுடன் 10,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் விடுவிக்க அனுமதியளித்தார்.
அத்துடன், அவரது பயணக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், இரு வாரங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு செல்லும்படியும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.



