ஷா ஆலம், ஜூலை 21: நேற்று கிள்ளானில் வீடு ஒன்றின் கூரை மீது நிர்வாணமாக நடந்து சென்ற நபர், முறையான ஆவணங்கள் இல்லாத சட்டவிரோத குடியேறி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
37 வயதுடைய அந்த நபர் மீது சேதம் விளைவித்தல், கடுமையான ஆபாச நடத்தை மற்றும் 1959/63 குடிநுழைவு சட்டத்தை மீறியது ஆகிய மூன்று குற்றங்களின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தென் கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் லிம் ஜிட் ஹுய் தெரிவித்தார்.
அச்சம்பவம் காலை 7 மணியளவில் தாமான் அந்தலாஸ் ஜெயா குடியிருப்பு பகுதியில் நடந்துள்ளது. சந்தேக நபர் வீட்டின் கூரை மீது இருப்பதை பொதுமக்கள் கண்டதும், அவரை கீழே இறக்க உதவுமாறு தீயணைப்புத் துறையை அழைத்தனர்.
தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சந்தேக நபர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் அவரிடம் முறையான அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது," என்று லிம் ஜிட் ஹுய் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் தவிர்ப்பதற்காக, இச்சம்பவம் குறித்த வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.
நேற்று, கிள்ளான், தாமான் ஸ்ரீ அந்தலாஸில் உள்ள ஒரு மாடி வீட்டின் கூரையின் மேல் ஒரு நபர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை வீட்டின் கூரையில் இருந்து வெற்றிகரமாக கீழே கொண்டு வந்தனர்.



