தெஹ்ரான்,ஜூலை 13 - ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதை அடுத்து அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டின் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மறு அறிவிப்பு வரும் வரை இந்த நீர்வழிப்பாதையை மூடுவதாகக் கூறியுள்ளதுடன், அமெரிக்காவின் "ஆக்கிரமிப்புக்கு" கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அரசு ஊடகங்கள் வாயிலாக எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றை தாங்கள் தாக்கியதாக IRGC கூறியுள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் அனைத்தும் ஈரானில் இருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.
ஹார்முஸ் நீரிணையில் சைப்ரஸ் கொடியுடன் சென்ற கப்பலை IRGC தாக்கியதை அடுத்து, இந்த வாரத்தில் மூன்றாவது சுற்று தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்தது.
ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், தகவல் தொடர்பு முறை மற்றும் கடலோர கண்காணிப்பு இடங்கள் உட்பட 140 ஈரானிய இராணுவ இலக்குகளை அமெரிக்காவின் தாக்குதல்கள் தாக்கியதாக அது கூறியுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா பரிந்துரைத்த பாதை வழியாக செல்ல முயன்ற மூன்று வணிக டாங்கர் கப்பல்களை ஈரான் தாக்கியது.
ஈரானிய கடல் பகுதி வழியாக செல்லும் தனிப்பாதை மட்டுமே "பாதுகாப்பானது" என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 115 பேர் காயமடைந்தனர் என்று ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் பரிமாற்றங்கள், பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.



