ஷா ஆலம், ஜூலை 11: மாணவர் மற்றும் சமூகத்தினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கக் கூடியது யோகா பயிற்சி.
இப்பயிற்சி மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் தெரிவித்தார்.
"யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மன-ஆன்மீக நல்வாழ்வுக்கு பங்களிக்கும் ஒரு வகையான உடற்கல்வியாகும்."
"யோகா பயிற்சியை இப்போது பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்கள் மேற்கொள்கின்றனர். கிள்ளானிலேயே பல யோகா மையங்கள் உள்ளன, மேலும் இந்த பயிற்சி அனைத்து வயதினர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மலேசிய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட தைச்சி (tai chi) மற்றும் யோகா போன்ற பயிற்சிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளையும் நாம் காண முடிகிறது."
மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற திட்டங்கள் வருடாந்திர நிகழ்வாக மாற்றப்பட வேண்டும்," என்று கணபதிராவ் கூறினார்.
இங்குள்ள சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா டேவான் ஜுப்லி பேராக் மண்டபத்தில் (Dewan Jubli Perak) இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான 12-வது உலக யோகா தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்கிடையில், இளம் வயதிலிருந்தே மன ஆரோக்கியத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ். தமிழரசு தெரிவித்தார்.
"யோகா, மாணவர்கள் அதிக கவனத்துடனும் ஒழுக்கத்துடனும் இருக்க உதவுகிறது. இதன் மூலம் அவர்களுக்குள் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர முடியும். கூடுதலாக, கற்றுக்கொண்ட சுவாச நுட்பங்கள் அவர்கள் அழுத்தங்களை எதிர்கொள்ளும்போது அமைதியாக இருக்கவும் உதவுகின்றன."
எனவே, எதிர்காலத்தில் சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறையுடனும் மாநில அரசுடனும் இணைந்து இன்னும் பெரிய அளவில் இதுபோன்ற திட்டத்தை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அளவிலான 12-வது உலக யோகா தினக் கொண்டாட்டத்தில், மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 27 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் சீனப்பள்ளிகளைச் சேர்ந்த 200 பேர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே யோகா பயிற்சியை ஊக்குவிப்பதற்காக, இந்திய உயர் ஆணையம், மலேசிய இந்திய வம்சாவளியினரின் உலகளாவிய அமைப்பு (GOPIO) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சிலாங்கூர் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் மன்றம் இத்திட்டத்தை ஏற்று நடத்தியது.





