ஷா ஆலாம், ஜூலை 9 - பகடிவதையால் தனக்கு நேர்ந்த கஷ்டங்களை மனதில் அடக்கி வைத்திருந்தது மற்றும் மனக்கசப்பின் வெளிப்பாடாகவே பள்ளிக்கூடத்தில் கத்தியைக் கொண்டு தாக்கியதாக, பந்திங் இடைநிலைப் பள்ளியில் அத்தாக்குதலை மேற்கொண்டிருந்த மாணவி காரணமாக கூறியிருக்கிறார்.
எனினும், அம்மாணவி கூறியிருப்பது போல், பகடிவதை நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்தார.
இதனிடையே, தொடக்க விசாரணையில், தாக்குதலை மேற்கொண்ட மாணவி மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
அதோடு, சம்பந்தப்பட்ட அம்மாணவியின் அச்செயலுக்கு சமூக ஊடகப் பயன்பாடு ஒரு காரணமாக இருக்கக் கூடுமா எனவும் போலீஸ் விசாரிக்கின்றனர். மேலும், அம்மாணவி கடந்தாண்டு இறுதியில் பள்ளிக்கூட கட்டடத்தில் இருந்து குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.
விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவி கூர்மையான ஆயுதத்தை இணையம் வாயிலாக வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கத்தியை அம்மாணவி முதுகுப் பையில் மறைத்து வைத்திருந்ததாகவும், பள்ளியின் கதவு திறந்திருந்த சமயம் அம்மாணவி அப்பள்ளிக்குள் நுழைந்ததாகவும் டத்தோ ஷாசெலி காஹார் தெரிவித்தார்.



