இஸ்தான்புல், ஜூலை 6 - மறைந்த ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை தலைநகர் தெஹ்ரானின் வான்வெளி முற்றிலும் மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
தலைநகரில் பொது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் வேளையில், தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் (Mehrabad) சர்வதேச விமான நிலையம் மற்றும் இமாம் கொமேனி (Imam Khomeini) சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் வழக்கமான விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
நாளை செவ்வாய்க்கிழமை மெஹ்ராபாத் விமான நிலையம் மீண்டும் தனது வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கும் என்றாலும், இமாம் கொமேனி விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
மேலும், ஜூலை 9-ஆம் தேதி, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாட்டில் (Mashhad) இறுதி அடக்கச் சடங்குகள் நடைபெறும் போது, அந்நகரத்தின் வான்வெளியும் ஷாஹித் ஹாஷெமினெஜாத் (Shahid Hasheminejad) சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகளும் முழுமையாக முடக்கப்படும்.
ஜூலை 9 அன்று ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாட்டில் உள்ள இமாம் அலி ரெசா (Imam Ali Reza) புனிதத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
மஷாட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் அந்த இறுதி நாளைத் தவிர, ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நாட்டின் பிற பகுதிகளில் விமானங்கள் தடையின்றி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து நடத்திய தாக்குதலில் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பல வார காலப் போருக்கு வழிவகுத்ததோடு, ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றது.



