ஷா ஆலாம், ஜூலை 5: இங்குள்ள ஒரு கல்லூரியின் ஊழியர் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் ஓரின பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, போலீஸார் இதுவரை இரு நபர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும், கல்லூரி நிர்வாகம் உட்பட இன்னும் சில சாட்சியாளர்களையும் விசாரணைக்கு அழைக்கவுள்ளனர்.
வாக்குமூலம் அளித்துள்ள அந்த இரு நபர்களில் ஒருவர் இந்த வழக்கின் புகார்தாரர். மற்றொருவர் சந்தேக நபரான ஊழியரின் தந்தை என ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாருடின் சாமா (ACP Sarudin Samah) தெரிவித்தார்.
போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின்படி, 30 வயது மதிக்கத்தக்க உள்நாட்டைச் சேர்ந்த அந்த ஆண் சந்தேக நபர், கடந்த ஈராண்டுகளாக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
"கல்லூரி ஊழியர்களின் ஆரம்பகட்ட தகவல்களின்படி, வேலைக்கு ஆட்களை எடுக்கும் செயல்பாட்டின் போது நிர்வாகத் தரப்பு சம்பந்தப்பட்ட நபரின் முந்தைய குற்றப் பின்னணிகளைச் சரிபார்க்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, சந்தேக நபருக்கு ஏற்கனவே பாலியல் குற்றங்கள் தொடர்பான பின்னணி இருப்பது அவர்களுக்குத் தெரியாமல் போயுள்ளது.இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தவும், விசாரணைக்கு உதவி பெறவும் கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வ வாக்குமூலம் பெறப்படும்," என்று அவர் கூறினார்.
டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிப்பது மற்றும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவது உள்ளிட்ட மேல்நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னரே அடுத்த கட்ட உத்தரவுக்காக இந்த வழக்கு அரசு துணை வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் சாருடின் தெரிவித்தார்.
இங்குள்ள ஓர் உணவகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அந்தச் சந்தேக நபர், நேற்று முதல் ஏழு நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



