பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16- மலேசிய மனநல மருத்துவ சங்கத்தின் (Malaysian Psychiatric Association) நிறுவனத் தலைவரும், நாட்டின் நவீன மனநல மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எம். மகாதேவன், தனது 96-ஆவது வயதில் காலமானார்.
அரசாங்க தலைமை மனநல மருத்துவராகப் பணியாற்றியவரான டாக்டர் மகாதேவன், 1929 -ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி கோலாலம்பூரில் பிறந்தார்.
செயிண்ட் ஜொஹ்ன்ஸ் கல்வி மையத்தில் படித்த அவர், 1961-இல் இந்தியா பெங்களூரில் மருத்துவக் கல்வியை முடித்தார்.
பின்னர் அவர் அயர்லாந்திலுள்ள டப்லின் (Dublin) பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவப் பேராசிரியரான ஜோஹ்ன் டன்-னுடன் (John Dunne) இணைந்துப் பணியாற்ற அழைக்கப்பட்டார். அங்கு அவர் ஹிப்னோசிஸ் (Hypnosis ) துறையில் மேம்பாடுகளை ஏற்படுத்தினார்.
அதோடு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அவரது பெயரில் மாணவர் பயண கூட்டுறவு திட்டத்தையும் அமைத்தது.
இதனிடையே, பேராக் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள மத்திய மனநல மருத்துவமனையின் முதல் இயக்குநராகப் பணியாற்றிய அவர், பின்னர் அந்த மருத்துவமனைக்கு “Hospital Bahagia Ulu Kinta” எனப் பெயர் மாற்றினார்.
இவ்வேளையில், பொதுமக்கள் இன்றும் நாளையும் காலை மணி 10 -இல் இருந்து மதியம் மணி 1 வரையிலும், மதியம் மணி 3-இல் இருந்து மாலை மணி 6 வரையிலும் , கோலாலம்பூர், உகாய் ஹைட்ஸ் ( Ukay Heights) லோரோங் லீ ஹின் நியோ 1 , எண் 32 முகவரியிலுள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தலாம் .
அவரது நல்லுடல் வியாழக்கிழமை இறுதி சடங்குகளுக்குப் பின்னர் செந்தூல் இந்து தகன மையத்தில் தகனம் செய்யப்படும்.



