கோலாலம்பூர், ஜூன் 6:- அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளுக்கு முன்னதாக, தேசிய ஆடவர் இரட்டையர் பிரிவை வலுப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டமாக ஆரோன் சியா-சோ வூய் யிக் மற்றும் டீ காய் வுன்-மேன் வெய் சோங் ஆகியோரின் இணைகளை பிரிக்கும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தால் தற்போது உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள ஆரோன்-வூய் யிக் மற்றும் 6-ஆவது இடத்தில் உள்ள வெய் சோங்-காய் வுன் ஆகியோரின் உலகத் தரவரிசைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மலேசிய பூப்பந்து சங்கத்தின் பிஏஎம் தலைவர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
"இது குறித்து பிரத்தியேகமாக விவாதிக்கப் படவில்லை. ஆனால், தேசிய இரட்டையர் பிரிவின் பயிற்சி இயக்குநர் ரெக்ஸி மைனாகி கடந்த மாதம் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்."புதிய இணைகளை உருவாக்குவதற்கான பயிற்சியாளர்களின் முடிவுக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.
வெவ்வேறு உத்திகளை முயற்சிக்க பயிற்சியாளர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும்," என புக்கிட் கியாராவில் இன்று நடைபெற்ற 'பிஏஎம்' மன்றக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும், ஆரோன்-வூய் யிக் மற்றும் வெய் சோங்-காய் வுன் ஜோடிகள் தங்களின் தற்போதைய உலகத் தரவரிசையைப் பயன்படுத்தி வரவிருக்கும் சில உலகக் கோப்பை போட்டிகளில் தங்களின் பழைய இணைகளுடனேயே களமிறங்குவார்கள் என தெங்கு ஜஃப்ருல் கூறினார்.
"தர வரிசையைப் பொறுத்தவரை, அவர்கள் தேசிய தர வரிசையைப் பயன்படுத்துவார்கள். உலகச் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அவர்கள் தற்போதைய இணைகளின் அடிப்படையிலேயே தகுதி பெற்றுள்ளதால், அந்தப் போட்டிகளில் அவர்கள் அதே பழைய இணைகளுடன்தான் விளையாடுவார்கள்.
"எனினும், குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகளுக்காக நாம் நீண்ட கால அடிப்படையில் சிந்திக்க வேண்டும். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுகள் தொடங்கும் அடுத்த ஆண்டுக்குக் காத்திருப்பதை விட, இப்போது புதிய மாற்றங்களைச் செய்து பார்ப்பதே சிறந்தது," என்றார் அவர்.
எதிர்வரும் ஜூலை 14 முதல் 19-ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ள ஜப்பான் ஓபன் போட்டிக்கான வீரர்கள் பட்டியலில், ஆரோன் காய் வுன்னுடனும், வூய் யிக் வெய் சோங்குடனும் இணைந்து விளையாட உள்ளதாகத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, இந்த இணைகள் குறித்த கேள்வியும் யூகங்களும் முன்னதாக எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



