தஞ்சோங் காராங், ஜூன் 5: இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானிய அமலாக்கத்தைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள விவசாய இயந்திர உரிமையாளர்கள் எதிர்நோக்கும் இயக்கச் செலவு அதிகரிப்பு குறித்த பிரச்சினையை மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
தற்போதுள்ள புடி மடாணி (Budi Madani) டீசல் மானியத் திட்டத்தில் விவசாய இயந்திரங்கள் சேர்க்கப் படாததால், இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஐஆர். இஸ்ஹாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட அனைத்து விவசாய நடவடிக்கைகளும் போக்குவரத்து மற்றும் முக்கிய உபகரணங்களாக இயந்திரங்களைப் பயன்படுத்துவதையே நம்பியுள்ளன, இதனால் உற்பத்திச் செலவில் டீசல் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
"விவசாய இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள் புடி மடாணி திட்டத்தின் கீழ் வரவில்லை. மானியத் திட்டத்தின் மூலம் எவ்வாறு உதவுவது என்பதை ஆராயுமாறு நாங்கள் அரசாங்கத்திற்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம்.
"இந்த இயந்திரங்களுக்கு உதவுவதன் மூலம் உணவு உற்பத்தி செலவைக் குறைக்க முடியும். இது விலைகளை நிலைநிறுத்த வேண்டிய உணவுப் பாதுகாப்போடு தொடர்புடையதாகும்.
"நான் இதனை உயர் மட்டத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன், மீண்டும் கொண்டு செல்வோம். மாநில அளவிலும் நாங்கள் இரண்டாவது உதவித் தொகுப்பைப் பரிசீலித்து வருகிறோம், விவசாயிகளின் சுமையைக் குறைக்க உதவும் வகையில் டீசல் தொடர்பான இந்தப் பிரச்சினையையும் நாங்கள் விரிவாக ஆராய்வோம்," என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள சுங்கை பூரோங்கில் உள்ள பிபிஎன்எஸ் (PPNS) நெல் விதை உற்பத்தி மையத்தில், சிலாங்கூர் மாநில விவசாயிகள் அமைப்புக்கு (PPN) விவசாய இயந்திரங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம், நெல் விவசாயிகள், பயிரிடுவோர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட விவசாயத் துறையில் உள்ளவர்களுக்கு டீசல் மானியத்தை அதிகரிப்பது மற்றும் விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனையை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டது.
தேசிய உணவு உற்பத்தித் துறையின் இயக்கச் செலவு அழுத்தத்தைக் குறைப்பதற்கான உடனடி நடவடிக்கையாக, இந்த ஆலோசனை தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்ற (MTEN) கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு முன்பு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதே நிகழ்வில், 2018-ஆம் ஆண்டில் மூடப்பட்டு தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள பிபிஎன்எஸ் நெல் விதை உற்பத்தி மையத்தின் செயல் பாடுகளைப் பார்வையிட இஸ்ஹாம் சுமார் 30 நிமிடங்கள் செலவிட்டார்.
மேலும், நெல் வீணாவதையும் மண் சேதமடைவதையும் குறைக்கவும், சிலாங்கூரின் வடக்குப் பகுதியில் நெல் அறுவடைத் திறனை வலுப்படுத்தவும் உதவும் வகையில் மூன்று சிறிய அறுவடை இயந்திரங்களையும் அவர் பிபிஎன்எஸ் அமைப்புக்கு வழங்கினார்.
"600 டன் நெல் விதைகள் இருப்புடன் அவர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி இரண்டு பருவங்கள் ஆகின்றன. இந்த இடத்தை மறுசீரமைக்க அவர்கள் 13.7 மில்லியன் ரிங்கிட் செலவிட்டுள்ளனர், மேலும் தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்வதிலும் வெற்றி கண்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.
விவசாய இயந்திரங்களுக்கான டீசல் மானியப் பிரச்சினையை மத்திய அரசாங்கத்திடம் கொண்டு சென்றது சிலாங்கூர்
5 ஜூன் 2026, 6:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைnational
உங்கள் கருத்து என்ன?



