இஸ்லாமியச் சமூகத்தை ஒன்றிணைக்கும் , இஸ்லாமிய சின்னமாகவும் மாமன்னர் திகழ்கிறார்

1 ஜூன் 2026, 7:52 AM
இஸ்லாமியச் சமூகத்தை ஒன்றிணைக்கும் , இஸ்லாமிய சின்னமாகவும்  மாமன்னர் திகழ்கிறார்

இஸ்லாமியச் சமூகத்தை ஒன்றிணைக்கும் சின்னமாகவும், இஸ்லாமியச் சட்டத்தை நிலைநிறுத்துபவராகவும் மாமன்னர் திகழ்கிறார்

சமூகத்தை ஒன்றிணைப்பதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும், மக்களின் நல்வாழ்வு-க்காக இஸ்லாமியச் சட்டங்கள் (Syariat Islam) முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி
செய்வதிலும் மலாய் ஆட்சியாளர்களின் பங்கு மிக முக்கியமானது.

மலாய் ஆட்சியாளர்கள் நாட்டின் இறையாண்மையின் அடையாளமாக மட்டுமின்றி, மார்க்கத்தின் கட்டளைகளும் போதனைகளும் அனைவராலும் பின்பற்றப்
படுவதை உறுதிசெய்யும் பொறுப்பையும் கொண்டுள்ளனர். இஸ்லாமியப் பார்வையில், ஒரு நாட்டின் நிலைத்தன்மையையும் மக்களின் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்ய ஆட்சியாளர் அல்லது மன்னரின் இருப்பு அவசியமானதாகும்.

அரசியலமைப்பு நிபுணரான பேராசிரியர் டத்தோ ஷம்ரஹாயு அப்துல் அஸிஸ் கூறுகையில், மலேசியா அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயக முறையைப் பின்பற்றினாலும், இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மன்னரே நாட்டின் ஆட்சியாளர் ஆவார் என்றார்.

"கூட்டாட்சி அளவில், மாமன்னர் (Yang di-Pertuan Agong) நாட்டின் தலைவராக விளங்குகிறார். அதாவது, ஜனநாயகக் கட்டமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை விட மாமன்னரின் பங்கும் செயல்பாடும் உயர்ந்ததாகும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், ஒரு தலைவர் தான் வழிநடத்தும் மக்களுக்கு முழுப் பொறுப்பானவர். அதே வேளையில், சட்டம், சமூகம், அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் அல்லாஹ்வின் சட்டங்கள் நிலைநிறுத்தப் படுவதை உறுதிசெய்யும் பெரும் பொறுப்பும் ஆட்சியாளருக்கு உள்ளது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மலேசியா பல இனங்களைக் கொண்ட நாடாக இருந்தாலும், அரச அமைப்பு தொடர்ந்து இயங்கி வருகிறது. மாமன்னர் தலைமையிலான இஸ்லாம், நீதிக் கொள்கைகள் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. "சமூகத்தில் எத்தகைய வேற்றுமைகள் இருந்தாலும், அனைவரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு நியாயமாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே இஸ்லாமின் நிலைப்பாடாகும்" என்று ஷம்ரஹாயு மேலும் கூறினார்.

நாட்டின் நிர்வாகத்தில் கலந்தாலோசிப்பது (musyawarah) ஒரு முக்கியமான கூறாகும், ஏனெனில் இது அதிகாரச் சமநிலைக்கு (checks and balances) வழிவகுக்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார். முஹாஜிர்கள் மற்றும் அன்சார்களை ஒன்றிணைத்ததும், மதீனாவில் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாதுரியத்திற்குச் சிறந்த உதாரணமாகும்.

"பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே ஒற்றுமையை உறுதிசெய்ய மன்னர் ஆட்சி முறை அவசியம் என்பதை அந்த வரலாற்று நிகழ்வு நிரூபிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்
படுவது, சுதந்திரம் அடைந்தது முதல் மலாய் ஆட்சியாளர்களிடையே உள்ள உயர்ந்த ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது. இது ஒரு சம்பிரதாயம் மட்டுமல்ல, மாறாக மாநில அளவிலான ஆட்சியாளர்களுக்கிடையேயான நம்பிக்கையின் அடையாளமாகும்.

"மலாய் ஆட்சியாளர்களிடையே உள்ள இந்த ஒற்றுமையை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. கூட்டாட்சி நாட்டின் இறையாண்மையைக் காக்கவும் நிர்வகிக்கவும் ஒரு மன்னர் மற்றொரு மன்னரை நம்புவது சாதாரண விஷயமல்ல. மாநில அளவிலான அரச அமைப்புகளின் இந்த ஒற்றுமையே கூட்டாட்சி அளவில் மாமன்னர் அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது," என்று அவர் விளக்கினார்.

ஒவ்வொரு மாநிலமும் அரச அமைப்பின் கீழ் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில்தான் கூட்டாட்சி அளவில் மாமன்னர் பதவி உருவாக்கப்பட்டது. மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் போன்ற மன்னர்கள் இல்லாத மாநிலங்களில் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலையைப் பாதுகாக்கவும், ஆளுநர்கள் (Yang Dipertua Negeri) மூலம் அரச அமைப்பு பிரதிநிதித்துவப்
படுத்தப்படுகிறது.

**வெறும் அடையாளமல்ல**

எனவே, அரச அமைப்பு என்பது வெறும் அடையாளமல்ல. மலாய் ஆட்சியாளர்களுக்கு உண்மையான அதிகாரமோ பங்கோ இல்லை என்று கருதுவது தவறானது. பிரிட்டிஷ் (United Kingdom) நாடாளுமன்ற ஜனநாயக முறைக்கும் மலேசிய அரச முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாததால் இத்தகைய தவறான கண்ணோட்டம் எழுகிறது என்று ஷம்ரஹாயு நம்புகிறார்.

பிரதமரை நியமிப்பது, நாடாளுமன்றத்தைக் கலைப்பது மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தைக் கூட்டுவது போன்ற முக்கிய விவகாரங்களில் மாமன்னருக்குத் தனிப்பட்ட அதிகாரம் (kuasa budi bicara) உள்ளது.

"மாமன்னர் மக்களின் ஒற்றுமையின் அடையாளம் என்று கூறப்பட்டாலும், அவர் பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ முடியாத ஒரு சிலையாகக் கருதப்படக் கூடாது. நமது நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி என்பது, அரசியலமைப்பால் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.

இந்த அரச அமைப்பு தொடக்கத்திலிருந்தே தனிப்பட்ட அதிகாரத்தைக் கொண்டுள்ளது," என்று மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளரான அவர் கூறினார்.

நீதி எப்போதும் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பும் உரிமையும் நமது நாட்டு அரச அமைப்புக்கு உண்டு. "அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களின் நலனைப் பேணத் தவறினால், மாமன்னரே மக்களுக்கான நீதியின் ஊற்றாகத் திகழ்வார்," என்று அவர் சுட்டிக்
காட்டினார்.

அரசியலமைப்பு மற்றும் அரச அமைப்பைப் புரிந்து கொள்ள, தேசியக் கோட்பாட்டின் (Rukun Negara) சாராம்சத்தைப் புரிந்துகொள்வது அவசியம். 'இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்' மற்றும் 'பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்' ஆகிய முதல் இரண்டு கோட்பாடுகளை ஜனநாயக அமைப்பில் சமநிலையில் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் வெவ்வேறாக இருந்தாலும், மாமன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசமாக இருப்பதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது.

ஜனநாயக முறையில் தலைவர்கள் எந்தளவுக்கு மக்களின் நலனைக் காக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அரச அமைப்பின் அதிகார எல்லையும் அமையும். மக்கள் அநீதிக்கு உள்ளாக்கப்படும்
போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன: ஒன்று ஜனநாயகத் தலைவர்கள், மற்றொன்று அரச அமைப்பு.

மாமன்னருக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான உறவு சுமுகமாக இருக்க வேண்டும். அதே வேளையில், அரச அமைப்பானது நவீன உலகமயமாக்கல் மற்றும் புதிய தலைமுறையினரின் மனநிலை மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் உறுதியற்ற தன்மையைக் குறிப்பிட்ட அவர், நாட்டை ஒன்றிணைப்பதில் அரச அமைப்பின் சாதுரியம் எவ்வாறு முக்கியப் பங்கு வகித்தது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

"கோவிட்-19 காலத்தில் நாடு அரசியல் உறுதியற்ற தன்மையையும் எதிர்கொண்டது. தேர்தல் இன்றி அரசாங்கம் மாறியபோது, அரச அமைப்பின் சாதுரியம் மிகவும் தேவைப்பட்டது. மக்கள் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்திய அந்தப் பெரும் சவால்களை அரச அமைப்பு மிகச் சிறப்பாகக் கையாண்டது," என்றார்.

அரச அமைப்பு மீதான மதிப்பு, அது அவமதிக்கப்
படுவதைத் தடுக்கும். மாமன்னரை அவமதிப்பது மக்களின் விசுவாசமின்மையைக் காட்டுவதோடு, சட்டத்தின் பார்வையில் அரச அமைப்பின் நிலையைப் புரிந்து கொள்ளாததையும் வெளிப்படுத்துகிறது.

அரச அமைப்பு என்பது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் ஒன்று என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.