மாஸ்கோ, மே 27 (பெர்னாமா-ஸ்புட்னிக்/ரியா நோவோஸ்டி) -- தனிமைப் படுத்தப்பட்டுள்ள எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலின் பயணிகளிடையே ஸ்பெயின் அதிகாரிகள் ஒரு புதிய சம்பவத்தைப் பதிவுசெய்ததைத் தொடர்ந்து, ஹண்டாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
"மே 2ஆம் தேதிக்குப் பிறகு புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை பதிவான 13 சம்பவங்களில், மொத்த மரண எண்ணிக்கை மூன்றாகவே உள்ளது. நிலைமை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் தேவையான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர், மற்றவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ளனர்," என கெப்ரேயஸ் 'X' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய அனைத்து நாடுகளின் அரசாங்கங்களுடனும் உலக சுகாதார நிறுவனம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அவர் கூறினார்.
நெதர்லாந்தைச் சேர்ந்த எம்.வி. ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில், ஹண்டாவைரஸ் உயிர்க் கொல்லி நோயான இதன் பரவல் மே மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இக்கப்பல் அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டேவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது மூன்று பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். வைரஸால் உயிரிழந்த பயணிகளின் உடலுடன் அந்த கப்பல் ராட்டர்டேமிற்குப் புறப்பட்டது. மே 18ஆம் தேதி ராட்டர்டேம் துறைமுகத்தை அடைந்த அக்கப்பலில் இருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள், துறைமுகப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
-- பெர்னாமா-ஸ்புட்னிக்/ரியா நோவோஸ்டி







