ஷா ஆலம், ஏப்ரல் 22: சிலாங்கூர் மாநிலத்தின் 11 மில்லியன் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டு முதல் மாநிலம் தழுவிய அளவில் 8 மில்லியனுக்கும் அதிகமான பல்வேறு வகையான மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறுகையில், சிலாங்கூர் மாநில வனத்துறை (JPNS) 2,502,911 மரக்கன்றுகளையும், உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) மற்றும் மாவட்ட, நில அலுவலகங்கள் (PDT) 5,547,100 மரக்கன்றுகளையும் நட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளன.
"மரக்கன்றுகள் நடும் திட்டம் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயர்கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட, நில அலுவலகங்களால் நடப்பட்ட மரங்கள் குறித்த தகவல்களை சிலாங்கூர் மாநில வனத்துறை, மாநில காலநிலை மாற்றத் தழுவல் மையத்துடன் (SCAC) ஒருங்கிணைக்கும்," என்றார் அவர்.
இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் (DNS), பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷித் ஹரோன் அமினார் ரஷீத்தின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதனிடையே, இந்த ஆண்டு முழுவதும் 100,000 மரக்கன்றுகள் நடும் புதிய இலக்கை மாநில அரசு நிர்ணயித்துள்ளது என்றும், இந்த முயற்சி ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றம், மாவட்ட, நில அலுவலகம் மற்றும் அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் என்றும் ஜமாலியா குறிப்பிட்டார்.
மேலும், நிரந்தர வனக் காப்பகப் பகுதிகளில் (HSK) ஆபத்தான அல்லது அபாயகரமான மரங்களைக் கண்காணித்து பராமரிக்கும் நடவடிக்கையை சிலாங்கூர் மாநில வனத்துறை மேற்கொண்டுள்ளது.
"உள்ளூராட்சி மன்றங்கள், மரங்களின் வகைகளைத் தீர்மானிக்கவும், நிலப்பரப்பு தாவரங்களைப் பராமரிக்கவும் தேசிய நிலப்பரப்புத் துறை உருவாக்கிய தேசிய நிலப்பரப்பு வழிகாட்டுதல்கள் 2.0-ஐப் பயன்படுத்துகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், 11 மில்லியன் மரங்கள் நடும் இலக்கு போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் மாநில அரசு சரியான பாதையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
2021-இல் தொடங்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்தின் 11 மில்லியன் மரக்கன்றுகள் நடும் திட்டம், பசுமைப் பகுதிகளை அதிகரிப்பது மற்றும் காலநிலை மாற்றப் பிரச்சனைகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
8 மில்லியனுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டு சாதனை - சிலாங்கூர்
22 ஏப்ரல் 2026, 6:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மரங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க பராமரிப்புக்கு 5.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு - எம்பிஎஸ்ஜே
Shalini Rajamogun, Evelyn Moses
27 மே 2026

antarabangsa
ஒரு மில்லியன் ஹெக்டேர் தரிசு நிலத்தை மீட்டெடுத்து, 159 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சவுதி அரேபியா சாதனை
Shalini Rajamogun
29 மார்ச் 2026

national
இலக்கு உதவி தேவைகளை அடையாளம் காண தொழில் துறையுடன் சிலாங்கூர் ஈடுபடுகிறது
Pakiya
8 மே 2026

selangor
சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026: 6 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கீடு - சுற்றுப்பயணத் திட்டங்களை மேம்படுத்த மாநில அரசு அழைப்பு
Shalini Rajamogun
5 மே 2026

உங்கள் கருத்து என்ன?




