ஷா ஆலம், ஏப்ரல் 22: 2022-ஆம் ஆண்டில் மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சிலாங்கூர் வீட்டுமனைத் திட்டம் 3.0 (RSKU 3.0), சிலாங்கூரில் வணிக மேம்பாட்டுத் திட்டங்களையும் பொது வீட்டுவசதித் திட்டங்களையும் சமநிலை படுத்த உதவுகிறது.
யுனிவர்சிட்டி புத்ரா மலேசியாவின் (UPM) மனித சூழலியல் துறையின் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடல் விரிவுரையாளரான டாக்டர் முகமது முஜாஹீத் ஹசன், சமூகங்கள் முன்னேற்றத்தில் இருந்து ஓரங்கட்டப் படுவதைத் தவிர்க்க இந்த இரண்டு மேம்பாடுகளும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றார்.
"கிள்ளான் பள்ளத்தாக்கில் குறிப்பாக இந்த இரண்டு மேம் பாட்டுத் திட்டங்களும் அவசியமானவை. RSKU 3.0 திட்டத்தின் கீழ், தனியார் மேம்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட திட்டப் பகுதிகளில் மலிவு விலை வீடுகளையும் கட்ட வேண்டும்."
"நகரங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்வதற்கும், சமூக-பொருளாதார இடை வெளியைக் குறைப்பதற்கும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய இடங்களில் மலிவு விலை வீடுகளை வழங்குவதற்கும் இது அவசியமாகும்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஜனவரி 3, 2022-இல் அமலுக்கு வந்த RSKU 3.0 கொள்கை, சிலாங்கூரில் தனியார் மேம்பாட்டாளர்களால் மலிவு விலை வீட்டு வசதி மேம்பாட்டிற்கான முக்கிய வழிகாட்டியாக விளங்குகிறது. இது, வீட்டுவசதி தேவைகளையும் மேம்பாட்டாளர்களின் திறனையும் சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன் 2018-ஆம் ஆண்டின் வீட்டுவசதிக் கொள்கைக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், சிலாங்கூரில் மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறை சவாலாக இல்லை என்றும், மாநிலத்தில் விற்கப்படாத ஆயத்த சொத்துக்கள் ஏராளமாக இருப்பதாகவும் டாக்டர் முஜாஹீத் கருத்து தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, ஜோகூர் (9,507), கோலாலம்பூர் (4,112) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, சிலாங்கூரில் 2,129 சேவை அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அவர் விளக்கினார். மேலும், நாட்டிலேயே இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான புதிய குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலமாகவும் சிலாங்கூர் உள்ளது.
"எனவே, மலிவு விலை வீடுகளின் பற்றாக்குறையில் நமக்கு தீவிரமான பிரச்சினை இருப்பதாக நான் கருதவில்லை. சிலாங்கூரில் விற்கப்படாத பல குடியிருப்புகள் உள்ளன, ஆனால் வாங்குபவர்களின் இயலாமையே உண்மையான பிரச்சினையாக உள்ளது," என்றார்.
கடந்த ஆண்டு, மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை (JPPH) வெளியிட்ட அறிக்கையின்படி, விற்கப்படாத சேவை அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கையில் ஜோகூர் 9,507 அலகுகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (4,112 அலகுகள்) மற்றும் சிலாங்கூர் (2,561 அலகுகள்) உள்ளன.
கூடுதலாக, 2025-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 3,194 அலகுகளுடன் ஜோகூர் புதிய வீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதில் முதலிடம் வகிக்கிறது. சிலாங்கூர் (2,129 அலகுகள்) மற்றும் நெகிரி செம்பிலான் (1,838 அலகுகள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சிலாங்கூர் வீட்டுமனைத் திட்டம் 3.0 (RSKU 3.0), சிலாங்கூரில் வணிக மேம்பாட்டுத் திட்டங்களையும் பொது வீட்டுவசதித் திட்டங்களையும் சமநிலைப்படுத்துகிறது
22 ஏப்ரல் 2026, 2:39 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இலக்கு உதவி தேவைகளை அடையாளம் காண தொழில் துறையுடன் சிலாங்கூர் ஈடுபடுகிறது
Pakiya
8 மே 2026

selangor
சிலாங்கூர் சுற்றுலா ஆண்டு 2026: 6 லட்சம் ரிங்கிட் மானியம் ஒதுக்கீடு - சுற்றுப்பயணத் திட்டங்களை மேம்படுத்த மாநில அரசு அழைப்பு
Shalini Rajamogun
5 மே 2026

selangor
ஆறு இடங்களில் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை ஏற்பாடு
Shalini Rajamogun
5 மே 2026

national
அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையிலான பதிவுகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டத்தோ மந்திரி புசார்
Shalini Rajamogun, Sofia Nasir
4 மே 2026

உங்கள் கருத்து என்ன?





