புத்ராஜெயா, மே 30 - இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தூண்டிய உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து, கொள்ளை லாபம் ஈட்டும் நடவடிக்கைகளைக் கட்டுப் படுத்துவதற்காக, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) வரும் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 'ஒப்ஸ் கேசான் 6.0' (Ops Kesan 6.0) நடவடிக்கையைத் தொடங்கவுள்ளது.
மூலப்பொருட்கள், செயல்பாடுகள் மற்றும் வணிகச் செலவுகள் அதிகரிப்பதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வணிகர்கள் நியாயமற்ற முறையில் விலை உயர்த்துவதைத் தடுப்பதே 2011-ஆம் ஆண்டின் விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளைலாபத் தடுப்புச் சட்டத்தின் (சட்டம் 723) கீழான இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் ஆடம் கூறினார்.
விநியோகச் சங்கிலி, போக்குவரத்து செலவு மற்றும் நாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றில் உலகளாவிய விநியோக நெருக்கடியின் படிப்படியான தாக்கத்தின் எதிர்பார்ப்புகளைத் தொடர்ந்தே ஒப்ஸ் கேசான் 6.0 அமல்படுத்தப் படுவதாக அவர் தெரிவித்தார்.
"நியாயமற்ற முறையில் அதிக லாபம் ஈட்டுவதற்காக மூலப்பொருட்கள், செயல்பாடு அல்லது வணிகச் செலவுகளின் அதிகரிப்பை வணிகர்கள் சாதகமாகப் பயன்படுத்துவதைக் கண்காணித்து உறுதிசெய்யும் நோக்கில் இந்தச் செயலூக்கமான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது," என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சட்டம் 723 மற்றும் விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளைலாபத் தடுப்பு (நியாயமற்ற அதிக லாபத்தை நிர்ணயிப்பதற்கான வழிமுறை) விதிமுறைகள் 2018 ஆகியவற்றுக்கு இணங்க இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக அஸ்மான் கூறினார்.
மத்திய கிழக்கில் நெருக்கடி தொடங்கியதிலிருந்து அவ்வப்போது சேகரிக்கப்பட்ட தரவுகளை இந்த நடவடிக்கை பயன்படுத்தும் என்றும், உற்பத்தியாளர்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள், விநியோகஸ்தர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் என முழுமையான விநியோகச் சங்கிலியையும் இந்தச் சோதனை உள்ளடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெட்ரோகெமிக்கல் துறை (பேக்கேஜிங், பிளாஸ்டிக் மற்றும் விவசாய உரம்), விவசாயத் துறை (கடுகு இலை, கைலான், வெள்ளரி, தக்காளி மற்றும் சிவப்பு மிளகாய் போன்ற காய்கறிகள்), கால்நடைத் துறை (கோழித் தீவனம், நிலையான கோழி மற்றும் அனைத்து வகையான கோழி முட்டைகள்) ஆகியவை சோதனையின் முக்கியக் கவனமாக இருக்கும் என்றார் அவர்.
மேலும், போக்குவரத்துத் துறை, குறிப்பாக தளவாட விநியோகக் கட்டணங்களும் சோதனையின் முக்கியக் கவனமாக இருக்கும் என்பதோடு, பெறப்படும் தற்போதைய புகார்களின் அடிப்படையில் பிற துறைகள் மீதும் முனைப்பான சோதனைகள் நடத்தப் படும்.
"ஒப்ஸ் கேசான் 6.0 அமலாக்கத்தின் போது, நாடு முழுவதும் உள்ள KPDN அமலாக்க அதிகாரிகள், விற்பனை விலை மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவதற்காக, சட்டம் 723-இன் பிரிவு 21-இன் கீழ் சோதனை செய்யப்படும் வளாகங்களுக்குப் பொருட்களின் தகவல் சரிபார்ப்பு நோட்டீஸை (NPMB) வழங்குவார்கள்," என்று அவர் கூறினார்.
இந்த நோட்டீஸுக்குப் பதிலளிக்கத் தவறும் அல்லது போலியான தகவல்களை வழங்கும் வணிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஸ்மான் எச்சரித்தார்.
"ஆரம்பக் கட்டப் பகுப்பாய்வின் முடிவில் தற்போதைய லாபச் சதவீதம் முந்தைய ஆண்டின் லாப மதிப்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், மேலும் அந்த வணிகம் கொள்ளை லாபம் ஈட்டுகிறது என்பதைத் தொடர் விசாரணை நிரூபித்தால், 2011-ஆம் ஆண்டின் AKHAP பிரிவு 14(1)-இன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் அவர்.
நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் அமைப்புகளுக்கு, முதல் குற்றத்திற்கு RM500,000-க்கு மிகாத அபராதமும், இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக RM1 மில்லியன் அபராதமும் விதிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.
தனிநபர் வணிகர்கள் அல்லது கார்ப்பரேட் அல்லாத அமைப்புகளுக்கு, முதல் குற்றத்திற்கு RM100,000-க்கு மிகாத அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
"இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய குற்றங்களுக்கு, தனிநபர் வணிகர்களுக்கு RM250,000-க்கு மிகாத அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
உலகளாவிய விநியோக நெருக்கடியை பயன்படுத்தி கொள்ளை லாபத்தைத் தடுக்க நடவடிக்கை -ஒப்ஸ் கேசான் 6.0
30 மே 2026, 6:40 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




