வாஷிங்டன், மே 28 - தெற்கு ஈரானில் உள்ள ராணுவ தளம் ஒன்றைக் குறிவைத்து அமெரிக்கா புதிய வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது என்று அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அனடோலு ஏஜென்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலானது, அமெரிக்கப் படைகளுக்கும் ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள வணிக கப்பல் வழித்தடங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என நம்பப்படும் இடத்தின் மீது நடத்தப்பட்டதாக அந்த அதிகாரி ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார்.
முன்னதாக, ஈரான் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "இதில் எனக்கு திருப்தி இல்லை, ஆனால் நாங்கள் அதை எட்டுவோம். அது நடக்க வேண்டும் அல்லது அந்த நோக்கத்தை அடையும் வரை நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்," என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது திடீர் தாக்குதல்களைத் தொடுத்தபோது பிராந்திய அளவிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதோடு, பிராந்தியம் முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் நடத்தியது.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் மூலம் ஏப்ரல் 8ஆம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது, ஆனால் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நிலையான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் தோல்வியடைந்தன.
இதனைத் தொடர்ந்து டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்தார். அதே வேளையில், இந்த முக்கிய நீர்வழித்தடம் வழியாக ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீதான தடைகளைத் தொடர்ந்தார். இது தவிர, அமைதி ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என்றும் அவர் அவ்வப்போது கூறி வந்தார்.
தெற்கு ஈரானில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய வான்வெளி தாக்குதல்
28 மே 2026, 4:15 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



