சமூக வலைத்தளங்களில் 3R தொடர்பான உணர்திறன்மிக்க பதிவுகளைக் கட்டுப்படுத்த சட்டம் 588 போதுமானது

25 மே 2026, 4:51 AM
சமூக வலைத்தளங்களில் 3R தொடர்பான உணர்திறன்மிக்க பதிவுகளைக் கட்டுப்படுத்த சட்டம் 588 போதுமானது

ஷா ஆலம், மே 25 - மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் ஆபத்தான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் (சட்டம் 588) இன்னமும் போதுமானதாகவே இருப்பதாக நம்பப்படுகிறது.

பெரித்தா ஹரியான் (BH) அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில், உணர்திறன்மிக்க பதிவுகளைப் பரப்பிய பின்னர் அந்த கணக்குகளை அழிப்பது அல்லது முடக்குவது போன்ற சில தரப்பினரின் நடவடிக்கைகளே தற்போதுள்ள மிகப்பெரிய சவாலாகும் என்றார்.

"குறிப்பாக 3R விவகாரங்களை உருவாக்குவதற்காகவே பல போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம். இந்தப் பதிவுகளை பரப்பிய பிறகு, அந்த கணக்குகள் முடக்கப்படுகின்றன. எனவே, இதில் குற்றவியல் கூறுகள் உள்ளன; கல்லை எறிந்து விட்டு கையை மறைத்துக் கொள்ளும் (baling batu sembunyi tangan) தந்திரம் இதில் அடங்கியுள்ளது," என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற தேசிய இளைஞர் தினம் 2026-ஐ முன்னிட்டு 'மடாணி சமூகத்தின் படைப்பாற்றல் இளைஞர்கள்' வெளியீட்டு விழாவிற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் அடையாளங்களையும் படங்களையும் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் நோக்கில் உருவாக்கப் படும் போலி சமூக வலைத்தளக் கணக்குகள் அதிகரித்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக ஃபஹ்மி மேலும் விளக்கினார்.

இந்த நிலைமை, போலி மற்றும் ஆள்மாறாட்டக் கணக்குகள் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாக அவர் கூறினார்.

"இதுபோன்ற போலி கணக்குகள் மற்றும் ஆள்மாறாட்டக் கணக்குகள் (impersonator accounts) பெருகுவதை கட்டுப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.

அதே வேளையில், சமூக வலைத்தளங்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல்கள் உட்பட, இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இரண்டு குறிப்பிட்ட குறியீடுகள் கடந்த மே 22ஆம் தேதி வெளியிடப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

உணர்திறன் மற்றும் 3R கூறுகள் அடங்கிய உள்ளடக்கங்களைக் கையாள்வதில் சமூக வலைத்தள நிறுவனங்களின் ஒத்துழைப்பின் அளவை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) தற்போது மதிப்பிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

"SKMM தரப்பிலிருந்து டிக்டாக் (TikTok) போன்ற சில தளங்களுக்கு 'கோரிக்கை நோட்டீஸ்' (notice of demand) அனுப்பப்பட்டுள்ளது. மெட்டா (Meta) போன்ற சில தளங்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இருப்பினும், 3R தொடர்பான சம்பவங்களை குறைப்பதற்கு இந்தத் தளங்கள் எடுக்க விருக்கும் நடவடிக்கைகளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.