மணிலா, மே 25: வடக்கு பிலிப்பைன்ஸின் பம்பாங்காவில் உள்ள ஏஞ்சல்ஸ் நகரில் இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள அபார்ட்மெண்ட் ஹோட்டலில் சிக்கியிருந்த மலேசியர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுமானப் பணியிலிருந்த ஒன்பது மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் மொத்தம் 26 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களில், 24 பேர் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டனர். அதேவேளையில், இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அருகிலுள்ள அபார்ட்மெண்ட் ஹோட்டலிலிருந்து இருவர் மீட்கப்பட்டனர்.
இன்று அதிகாலை 3 மணிக்கு (சனிக்கிழமை 1900 GMT) இந்தச் சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே, ஹோட்டல் சுவருக்கு அடியில் சிக்கியிருந்த அந்த மலேசியர் மீட்புக் குழுவினரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக பிலிப்பைன்ஸ் தற்காலிக தீயணைப்புத் துறை தலைவர் ரிக்கோ குவான் டியு தெரிவித்தார்.
"துரதிர்ஷ்டவசமாக, சற்றுமுன் நாங்கள் அவரை வெளியே கொண்டு வந்தபோது, அவர் உயிரற்ற நிலையில் இருந்தார்."
"சிக்கியிருக்கும் அனைத்துப் பாதிப்பாளர்களையும் கண்டுபிடிக்கும் வரை நாங்கள் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம். இன்னமும் அங்கு உயிருடன் இருப்பவர்கள் உள்ளனர். அதை நான் உறுதியாக நம்புகிறேன்," என்று குவான் டியு கூறினார்.
இதற்கிடையே, ஆரம்பக்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்ட மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து யாரோ வலியால் முனகும் சத்தத்தைக் கேட்டதாக பிலிப்பைன்ஸ் தீயணைப்பு பாதுகாப்புப் பணியகத்தின் பிராந்திய செய்தித் தொடர்பாளர் மரியா லியா சஜிலி தெரிவித்தார்.
மேலும், "இந்தச் சம்பவம் அதிகாலையில் நடந்ததால் பாதிக்கப் பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்," என்று மேயர் கார்மெலோ லாசாடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிலிப்பைன்ஸில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் மலேசியர் உயிரிழந்தது உறுதி
25 மே 2026, 2:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




