ஷா ஆலம், மே 23 - கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3.53 மணியளவில் பொந்தியான், பெக்கான் நானாசில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆறு சந்தேக நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 22 வயதுடைய உள்ளூர் ஆடவர்கள் என்று பொந்தியான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்பரின்டென்ட் ஹட்ஸ்ராட் உசேன் மியோன் உசேன் தெரிவித்தார். மே 21ஆம் தேதி இரவு 8 மணி முதல் மே 22ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவின் (IPK) உதவியுடன், ஜோகூர் காவல் படைப் பிரிவின் குற்றத் தடுப்புக் குழு மற்றும் பொந்தியான் மாவட்டக் காவல் தலைமையக (IPD) குற்றப்புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
"பத்து பகாட்டிலுள்ள தாமான் பொத்தானிக் மற்றும் கெலாங் பாத்தாவிலுள்ள லீமா கிடாய் பொது அடுக்குமாடி குடியிருப்பில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான முன்னைய போலீஸ் பதிவுகள் உள்ளன," என்று அவர் கூறினார்.
"விசாரணையின் போது, உயிரிழப்பை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பிருப்பதை அனைத்து சந்தேக நபர்களும் ஒப்புக்கொண்டனர்," என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நிசான் நவரா (Nissan Navara) மற்றும் டொயோட்டா எஸ்டிமா (Toyota Estima) ஆகிய இரண்டு வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக ஹட்ஸ்ராட் உசேன் தெரிவித்தார்.
“ஒரு கூர்வாள், ஐந்து கருப்பு நிற முகக்கவசங்கள் மற்றும் ஓர் ஐபோன் (iPhone) ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப் பட்டவற்றின் மொத்த மதிப்பு RM120.00 ஆகும்,” என்றும் அவர் கூறினார்.
அனைத்து சந்தேக நபர்களும் மே 28ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் (ரிமாண்ட்). குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றம், அபாயகரமான போதைப்பொருள் சட்டம் பிரிவு 15 (1) (a)-இன் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டு வருகிறது.
“கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு சந்தேக நபரைத் தேடும் பணியிலும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.




