ரவாங், மே 23: சிலாங்கா (SELangkah) டிஜிட்டல் தளத்துடனான ஒருங்கிணைப்பு, செல்கேட் ரவாங் சிறப்பு மருத்துவமனையின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இதன்மூலம் நோயாளிகள் சுகாதாரச் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் அணுக முடியும். செல்கேட் சிறப்பு மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி மிராண்டா ஹருமால் கூறுகையில், இந்தத் தளத்தின் மூலம் நோயாளிகள் தங்கள் பதிவு மற்றும் வார்டு அனுமதி செயல் முறைகளை மிகவும் எளிதாக நிர்வகிக்க முடியும் என்றார்.
"செல்கேட் ரவாங் சிறப்பு மருத்துவமனையின் தனித்துவங்களில் ஒன்று, நோயாளிகள் செலங்கா செயலி மூலம் பதிவு மற்றும் வார்டு அனுமதி செயல் முறைகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என்பதாகும். "இந்தச் சூழலமைப்பைக் கொண்டிருப்பதில் நாங்கள் பெருமைப் படுகிறோம், ஏனெனில் இது எங்கள் மருத்துவமனையில் சுகாதாரப் பராமரிப்பு தொடர்பான விஷயங்களை மக்கள் நிர்வகிப்பதை எளிதாக்குகிறது," என குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற செல்கேட் ரவாங் சிறப்பு மருத்துவமனையின் திறப்பு விழாவுக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, செல்கேட்டின் துணை நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம் பேறுகால ஆதரவு மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய வீட்டுப் பராமரிப்புச் சேவைகள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளையும் மருத்துவமனை வழங்குவதாக மிராண்டா கூறினார்.
இதற்கிடையே, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உருவாக்கப்பட்ட சிலாங்கா செயலி, செல்கேட் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை இணைக்கும் முக்கிய டிஜிட்டல் தளமாக விரிவடையும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
"சிலாங்கா செயலி, செல்கேட் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளை இணைக்கும் மின்-பணப்பை (e-wallet) சூழலமைப்பாக மாறும். இது வேறு எந்த சுகாதார அமைப்புகளிலும் காணப் படாத ஒன்றாகும்," என்று அவர் கூறினார்.நோயாளியின் மருத்துவப் பின்னணி, இரத்தப் பதிவுகள் மற்றும் சிகிச்சை வரலாறு ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைக்கப் பட்ட ஒரே சுகாதார அமைப்பில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்க இந்த அமைப்பு அனுமதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 2025-இல் செயல்படத் தொடங்கிய செல்கேட் ரவாங் மருத்துவமனையில் தற்போது 120 செவிலியர்கள் உட்பட சுமார் 300 ஊழியர்கள் உள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட சிறப்பு மற்றும் துணைச் சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 30 மருத்துவர்களின் ஆதரவுடன் இது இயங்குகிறது.
வடக்கு சிலாங்கூரில் இருதய சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு இறுதிக்குள் வடிகுழாய் ஆய்வகம் (cath lab) உட்பட பல இருதய சிகிச்சை வசதிகளை அறிமுகப்படுத்தவும் இம்மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.




