ஷா ஆலம், மே 22 - உலகளாவிய பொருளாதாரத் தேவைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையால் வேலைகளை இழப்பது என்பது வாழ்க்கையின் முடிவல்ல. மாறாக அது ஒரு புதிய திறனைக் கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம் என்றும் கே.பி.ஜே கிள்ளான் நிபுணர் மருத்துவமனையின் மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கூ யீ லியாம் தெரிவித்துள்ளார்.
வேலை இழப்பினால் கடுமையான நிதி நெருக்கடியும் மன உளைச்சலும் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட தனிநபர்கள் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீடியா சிலாங்கூர் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், வேலை இல்லாத காலகட்டத்தை வீணாக்காமல், தற்போதைய சவாலான வேலைச் சந்தைக்கு ஏற்ப புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் அல்லது ஏற்கனவே உள்ள திறன்களை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விவரித்தார்.

இதன் மூலம், புதிய அனுபவங்கள் மற்றும் புதிய கல்வி அறிவோடு மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், கூடுதல் திறன்களைக் கொண்டிருப்பவர்கள் சவால்களை எதிர்கொள்வதிலும் புதிய வேலைகளைத் தேடுவதிலும் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில், இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் பொதுமக்கள் தங்களின் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பேணுவது மிகவும் அவசியம் என்று டாக்டர் கூ அறிவுறுத்தினார்.
உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதோடு, புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற தேவையற்ற பழக்கவழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான உடல் மற்றும் மனநிலை மட்டுமே எதிர்கால சவால்களை எதிர்கொள்ள ஒருவரைத் தயார்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சிகள், தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் அல்லது இசை கேட்பது போன்ற நடவடிக்கைகளில் (Relaxation Therapy) ஈடுபடலாம் என்றும் அவர் யோசனை வழங்கியுள்ளார்.
மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பவர்கள் தங்களின் உணர்வுகளையும் பிரச்சனைகளையும் குடும்பத்தினரிடமோ அல்லது நெருங்கிய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஆதரவைப் பெற முடியும் என்று கூறிய அவர், தொழில்முறை உதவி தேவைப்படுபவர்கள் அரசு சுகாதார நிலையங்களில் இலவச மனநல சிகிச்சை மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது அரசு கிளினிக்குகளில் மனநலப் பரிசோதனைகள் வழங்கப்படுவதாகவும், உதவி தேவைப்படுபவர்கள் அங்கிருந்து ஆலோசகர்கள் அல்லது மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைக்கப்படுவார்கள் என்றும் டாக்டர் கூ யீ லியாம் மேலும் தெளிவுபடுத்தினார்.








