கிள்ளானில், படிவம் 2 மாணவர்கள் உட்பட 8 ஆடவர்கள் கைது  பள்ளி அருகே  மோதல்

21 மே 2026, 7:35 AM
கிள்ளானில், படிவம் 2 மாணவர்கள் உட்பட 8 ஆடவர்கள் கைது  பள்ளி அருகே  மோதல்

ஷா ஆலாம், மே 21: தெற்கு கிள்ளானில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த மோதலில் தொடர்புடையதாக நம்பப் படும் படிவம் 2 மாணவர்கள் உட்பட 8 ஆடவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 1 மணியளவில் போலீஸ் புகார் பெறப் பட்டதாகத் தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் லிம் ஜிட் ஹுவே தெரிவித்தார்.

கடந்த மே 19-ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்ததாகவும், அதன் பின்னர் 26 விநாடிகள் கொண்ட அந்த மோதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், தெற்கு கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இச்சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 14 முதல் 24 வயதுக்குட்பட்ட எட்டு உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்தனர்.

"கைது செய்யப்பட்டவர்களில் சிலர் இன்னும் பள்ளி மாணவர்களாக இருப்பதும், மற்றவர்கள் பள்ளிக்குச் செல்லாதவர்கள் என்பதும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

"இரண்டு பதின்ம வயதுக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் கேலி செய்ததே இந்த மோதலுக்கான காரணம் என நம்பப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் எந்தவொரு குண்டர் கும்பல் (Kongsi Gelap) தலையீடும் இல்லை என்றும் லிம் ஜிட் ஹுவே கூறினார்.

"குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 117-இன் கீழ் அவர்களைத் தடுப்புக்காவலில் (ரிமாண்ட்) வைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் சட்டம் பிரிவு 147-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்."

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், விசாரணைச் செயல்முறையைப் பாதிக்கும் வகையிலும் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு யூகங்களையும் அல்லது தவறான தகவல்களையும் பரப்ப வேண்டாம் என அவர் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

"இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், விசாரணைக்கு உதவும் வகையில் தெற்கு கிள்ளான் மாவட்டப் போலீஸ் தலைமையகத்திலோ (IPD) அல்லது அருகிலுள்ள ஏதாவது காவல் நிலையத்திலோ நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்," என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.