ஷா ஆலாம், மே 21: கடந்த மே 16ஆம் தேதி சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக கடல் நத்தை குஞ்சுகளை (anak kerang) வைத்திருந்த மற்றும் சேகரித்த இரண்டு நடவடிக்கைகளைச் சிலாங்கூர் மீன்வளத் துறை முறியடித்தது.
சுங்கை ஹாஜி டொரானி பகுதியில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை குறித்துப் பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், முதல் சோதனை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அத்துறை தெரிவித்துள்ளது.
மதியம் 1.15 மணிக்குத் தொடங்கிய அந்தச் சோதனையில், நான்கு மில்லிமீட்டருக்கும் (மி.மீ) குறைவான அளவுடைய கடல் நத்தை குஞ்சுகள் எனச் சந்தேகிக்கப்படும் கறுப்பு மணல் போன்ற பொருள் நிரப்பப்பட்ட 13 சாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.
"எப்படியிருந்தபோதிலும், சோதனை நடத்தப் பட்டபோது அந்தச் சாக்குகளுக்கு உரிமை கோரி எந்த ஒரு தனிநபரும் முன்வரவில்லை" என்று அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதே நாளில், கோலா சிலாங்கூர், பாசிர் பெனாம்பாங்கில் உள்ள ஒரு படகுத்துறையில் கடல் நத்தை குஞ்சுகளைச் சேகரிக்கும் மற்றொரு நடவடிக்கையையும் சிலாங்கூர் மீன்வளத் துறை முறியடித்தது.
அதிகாரிகள் வருவதை அறிந்த ஒரு கும்பல் அங்கிருந்து தப்பியோடியதைத் தொடர்ந்து, அந்தச் சோதனையில் சுமார் 930 ரிங்கிட் மதிப்புடைய 31 அள்ளும் வலைகள் (tangguk) பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் மீன்வள ஆதாரங்கள் மற்றும் கடல்வாழ் சூழலியல் அமைப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத கடல் நத்தை குஞ்சுகள் சேகரிப்பு நடவடிக்கைகளை ஒழிப்பதற்குக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என அத்துறை வலியுறுத்தியுள்ளது.




