வாஷிங்டன், மே 20 - சான் டியாகோவில் உள்ள மசூதி ஒன்றில் மூவரைக் கொன்ற பதின்ம வயது துப்பாக்கி ஏந்திய நபருடன் தொடர்புடைய இல்லங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஒரு குறுக்குவில்லை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
சான் டியாகோவில் உள்ள பெடரல் புலனாய்வுப் பணியகத்தின் (FBI) கள அலுவலகத்திற்குப் பொறுப்பான சிறப்பு அதிகாரி மார்க் ரெமிலி, சந்தேக நபருடன் தொடர்புடைய இல்லங்களில் அதிகாரிகள் மூன்று சோதனை வாரண்டுகளைச் செயல்படுத்தியதாகக் கூறினார்.
இரண்டு இடங்களில் இருந்து பல்வேறு கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகள், ஷாட்கன்கள், தோட்டாக்கள், தந்திரோபாய உபகரணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபரிடமிருந்து எழுதப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட தாகவும், சம்பவ இடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்களை ஆய்வு செய்யக் கூடுதல் வாரண்டுகளைப் பெற முயற்சிப்பதாகவும் ரெமிலி கூறினார்.
"சம்பவத்தின் போது சந்தேக நபர் கொண்டு வந்த மின்னணு சாதனங்களுக்கும் சோதனை வாரண்டை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். அவர் பயன்படுத்திய வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்களுக்குக் கூடுதல் வாரண்டுகளைப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளோம்," என்றார் அவர்.
"பதில்களைப் பெற நாங்கள் இன்னும் மின்னணு சாதனங்களை ஆய்வு செய்து வருகிறோம், ஆனால் அவர் பல தரப்பினர் மீது பரவலான வெறுப்பைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு வெறுப்புக் குற்றமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.


