கோலாலம்பூர், - நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் வலுப்படுத்த மடாணி அரசாங்கம் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு கொள்கையும் சமூக நீதி மற்றும் தொழிலாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் நாட்டின் வளர்ச்சியின் முக்கியத் தூணாக விளங்குகின்றனர் என்றும், அவர்களின் மதிப்பு, கண்ணியம் மற்றும் பங்களிப்பை ஒருபோதும் ஒதுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
எனவே, பொருளாதாரச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் நலனைப் பாதிக்காத வகையில், தொழிலாளர் சந்தையின் தயார் நிலை மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக்கு அரசாங்கம் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது.
"வகுக்கப்படும் ஒவ்வொரு கொள்கையும் வளர்ச்சியை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அதன் பலன்கள், குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தினரால் சமமாக உணரப் படுவதை உறுதி செய்வதாகும்."
"எங்கள் அணுகுமுறை தெளிவாக உள்ளது, அதாவது பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதை உறுதி செய்வதோடு, அதே நேரத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதாகும்," என்று அவர் இன்று தனது முகநூல் பக்கத்தில் நாளைய தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பதிவிட்டிருந்தார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் மலேசியா தொடர்ந்து தனது பின்னடைவை நிரூபித்து வருவதாகவும், மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகச் செயல்பட்டு, பதிலளிக்கக்கூடிய கொள்கைகளைச் செயல் படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்த முயற்சிகளில் சமூகப் பாதுகாப்பு முறையை வலுப்படுத்துதல், மறுபயிற்சி மற்றும் திறன் மேம் பாட்டிற்கான அணுகலை விரிவுபடுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் தன்னியக்கமாக்கலில் ஏற்படும் மாற்றங்களுக்கு தொழிலாளர்களைத் தயார் படுத்துவதை விரைவு படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று ரமணன் கூறினார்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழலில், நாட்டின் உண்மையான பலம், அதன் மக்கள் தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்வதிலும், உயர் திறன்களைப் பெறுவதிலும், மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதிலுமே தங்கியுள்ளது என்றார் அவர்.
குறைந்தபட்ச ஊதியம், கிக் தொழிலாளர் சட்டத்தை உருவாக்குதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது என்றும் ரமணன் தெரிவித்தார்.
"தொழிலாளர்களின் பாதுகாப்பு பணியிடத்தில் மட்டும் அல்ல, அவர்களின் முழு வாழ்க்கையையும் உள்ளடக்கியது... இது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல, மாறாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுத்தப்படும் ஒரு நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பாகும்," என்றார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தன்னியக்கமாக்கல் (automation) சகாப்தத்தில், மலேசியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவராக மட்டும் இருக்க முடியாது, மாறாக அதை உருவாக்குபவராகவும் முன்னோடியாகவும் திகழ வேண்டும்.
எனவே, இந்த ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும் 13-வது மலேசியத் திட்டத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, உள்ளூர் திறமைகளின் வளர்ச்சி மற்றும் திறன் பயிற்சியில் முதலீடு செய்வது முன்னுரிமையாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
மடாணி அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கையும் சமூக நீதிக்கும் தொழிலாளர் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கும் - ரமணன்
1 மே 2026, 3:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?


