நகர்ப்புறங்களில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க,  வண்டல் பொறிகள் பொருத்தும் திட்டம்

30 ஏப்ரல் 2026, 9:28 AM
நகர்ப்புறங்களில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க,  வண்டல் பொறிகள் பொருத்தும் திட்டம்

ஷா ஆலம்: நகர்ப்புறங்களில் திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்க, ஒவ்வொரு கட்டுமான தளத்திலும் வண்டல் பொறிகள் பொருத்தப் படுவதை உறுதி செய்வது உட்பட, மேம்பாட்டாளர்களுக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்கள் (PBT) உறுதியாக இருக்க வேண்டும்.

புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தின் (UPM) நீரியல் நிபுணர் டாக்டர் சிட்டி நூர்ஹிதாயு அபு பக்கரின் கூற்றுப்படி, பொது வடிகால் அமைப்புகளுக்குள் மணல் மற்றும் சேறு நுழைந்து நீரோட்டத்தை பாதிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

வண்டல் மண்ணை கட்டுப் படுத்தத் தவறினால், ஆறுகள் மற்றும் கால்வாய்களில் படிவுகள் ஏற்பட்டு, கனமழையின் போது நீரைத் தேக்கி வைக்கும் வடிகால் அமைப்பின் திறனைக் குறைக்கும் என்று அவர் விளக்கினார்.

வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் பீடத்தின் விரிவுரையாளரான அவர், வடிகால் அமைப்புகளின் பௌதீக பராமரிப்புக்கும் தீவிர கவனம் செலுத்தி, அது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

“கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் முக்கிய நீர்வழிகள், குறிப்பாக மழைக் காலங்களில் நீரோட்டத்தைத் தடுக்கக்கூடிய குப்பைகள், வண்டல் மற்றும் உலர்ந்த இலைகளிலிருந்து அவ்வப்போது சுத்தம் செய்யப்பட வேண்டும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

மேலும், நீர்ப்பிடிப்பு குளங்களில் உகந்த அளவில் நீரைத் தேக்கி வைக்கும் திறனைப் பராமரிக்க, அவை எப்போதும் நன்கு பராமரிக்கப் படுவதை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்ளது என்று டாக்டர் சிட்டி நூர்ஹிதாயு கூறினார்.

"தேங்கி நிற்கும் வண்டல் படிவுகள் நீர்த்தேக்கத் திறனைக் குறைத்து, கனமழையின் போது அதன் செயல் பாட்டைப் பாதிக்கும் என்பதால், நீர்ப்பிடிப்பு குளங்கள் படிவுகளிலிருந்து சுத்தம் செய்யப்பட வேண்டும்," என்றார்.

வேகமான வளர்ச்சி மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களால் ஏற்படும் நீர் பெருக்கத்தை தாங்க முடியாத பழைய வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அரிதாகப் பயன்படுத்தப்படும் நீர்ப்பிடிப்பு குளங்கள் வண்டல் படிவுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

சுற்றுச்சூழல் நேய வடிகால் கையேடு (MASMA) போன்ற வழிகாட்டுதல்களின்படி, உள்ளூராட்சி மன்றங்கள் மேலும் விரிவான, பயனுள்ள மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் வலையமைப்பைத் திட்டமிட வேண்டும் என்றும் டாக்டர் சிட்டி நூர்ஹிதாயு கூறினார்.

“வடிகால் அமைப்புத் திட்டமிடல், மேற்பரப்பு நீரோட்டத்தின் அதிகரிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் கனமழையின் போது உபரி நீரை நிர்வகிப்பதில் வடிகால் வலையமைப்பு ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்."

“இந்த அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்படுத்தப் பட்டால், தற்போதுள்ள வடிகால் அமைப்பு மேலும் திறமையாகச் செயல்பட்டு, நகர்ப்புறங்களில் திடீர் வெள்ளத்தின் தாக்கத்தைக் குறைக்க உதவும்,” என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.