ஷா ஆலம், ஏப்ரல் 29: தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் பெர்லிஸ் மாநிலம் முழுமையாகவும், கெடாவில் லங்காவி, குபாங் பாசு, பொக்கோக் செனா, பாடாங் தெராப், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங் மற்றும் கூலிம் ஆகிய மாவட்டங்களும் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை உத்தாரா மற்றும் செபராங் பிறை தெங்கா ஆகிய இடங்களிலும், பகாங்கில் ஜெராண்டுட், பெந்தோங், தெமர்லோ, மாரான், குவாந்தான் மற்றும் பெரா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிலும் பலத்த மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோகூர் மாநிலத்தில் பத்து பகாட், குளுவாங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய இடங்கள் பாதிக்கப்படலாம்.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கின் செரியான், சிமுஞ்சான், ஸ்ரீ அமான், பெத்தோங், சரிக்கே, சிபு, கனோவிட், தஞ்சோங் மானிஸ், தாரோ மற்றும் சோங் ஆகிய பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவும். சபாவில் பெனாம்பாங், கோத்தா கினபாலு, துவாரான் மற்றும் கினபாத்தாங்கான் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் பெய்யக்கூடிய இந்த மழையானது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்க வாய்ப்புள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடி மின்னல் குறித்த இந்த எச்சரிக்கையானது குறுகிய கால அடிப்படையிலானது என்றும், வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே இது செல்லுபடியாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







