உலகின் குறைந்த ஊழல் நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது

29 ஏப்ரல் 2026, 3:59 AM
உலகின் குறைந்த ஊழல் நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது

சிங்கப்பூர், ஏப்ரல் 29: சிங்கப்பூரில் கடந்த 2025-ஆம் ஆண்டில் ஊழல் தொடர்பான புகார்கள் 10 விழுக்காடு சரிவைக்கண்டுள்ளதாக அந்நாட்டின் ஊழல் புலனாய்வுப் பிரிவு (CPIB) தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 177 புகார்கள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை 160-ஆகக் குறைந்துள்ளது சிங்கப்பூரின் நேர்மையான நிர்வாகத்திற்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட 160 புகார்களில், போதுமான ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் 68 புகார்கள் புதிய விசாரணை வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பெறப்பட்ட மொத்தப் புகார்களில் 35 விழுக்காடு (56 புகார்கள்) அடையாளம் தெரியாத நபர்களால் ரகசியமாக வழங்கப்பட்டவையாகும்.

அதேபோல், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 68 புதிய வழக்குகளில் 16 வழக்குகள் இத்தகைய ரகசியப் புகார்களின் அடிப்படையில் அமைந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 2025-ஆம் ஆண்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 68 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பொதுத்துறை சம்பந்தப்பட்டது என்றும், பொதுமக்களால் வழங்கப்பட்ட லஞ்சத்தை அரசு ஊழியர்கள் நிராகரித்த சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவாகியுள்ளன என்றும் சி.பி.ஐ.பி (CPIB) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 90 நபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இவர்களில் 84 பேர் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், மீதமுள்ள 6 பேர் மட்டுமே பொதுத்துறை ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்ததில், கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பு ஆகிய துறைகளே ஊழல் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகக்கூடிய துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஊழலுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான நிலைப்பாடு மற்றும் வெளிப்படையான நிர்வாகம் சர்வதேச அளவில் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பின் 2025-ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில், 182 நாடுகளில் சிங்கப்பூர் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. 100-க்கு 84 புள்ளிகளைப் பெற்றுள்ள சிங்கப்பூர், உலகின் மிகக் குறைந்த ஊழல் நிலவும் நாடுகளின் வரிசையில் தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.