ஷா ஆலம், ஏப்ரல் 8: லெம்பா சுபாங் 1 மக்கள் வீட்டுத் திட்டத்தில் (பிபிஆர்) தேங்கிக் கிடந்த குப்பைகளைக் அகற்றும் பணி, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியம் (LPHS), சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து நிறுவனம் (PHSSB) மற்றும் ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் சேவை மையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.
வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் (KPKT) நிர்வாக ஒப்பந்தம் மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து குப்பைகள் தேங்கத் தொடங்கியதாக ஸ்ரீ செத்தியா சட்டமன்ற அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி முகமட் அஸ்லி ஜமாசிம் கூறினார்.
இந்தக் குப்பை மேடுகளால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"இப்பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணக் கோரி, ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ங்கா, வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார்."
"அதன் பயனாக, தற்போது குப்பைப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. பிபிஆர் கட்டிடங்களுக்குப் புதிய சாயம் பூசப்பட்டு, அதன் தோற்றமும் மெருகேறியுள்ளது," என்று அவர் முகநூல் காணொளி ஒன்றில் தெரிவித்தார்.
இதனிடையே, இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதிவாசி மஸ்லான் எம்.டி யூனோஸ் நன்றி தெரிவித்தார்.
"ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மியின் அக்கறைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நோன்புப் பெருநாளுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து மக்களின் நடமாட்டத்திற்குப் பெரும் தடையாக இருந்தது," என்றார் அவர்.
அதிகாரிகள் குப்பைத் தொட்டிகளை வழங்கியிருப்பது, மக்கள் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த உதவுவதாக மற்றொரு குடியிருப்பாளரான அனிசா முகமட் கூறினார்.
"டாக்டர் ஃபஹ்மி மற்றும் அவரது குழுவினரின் ஆதரவையும், சரியான இடங்களில் குப்பைத் தொட்டிகளை வழங்கிய சம்பந்தப்பட்ட தரப்பினரையும் நாங்கள் பாராட்டுகிறோம். இது தூய்மையைப் பேண சமூகத்தில் விழிப்புணர்வை ஊக்குவிக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
தூய்மையைப் பேணுவது ஒவ்வொருவரின் கூட்டுப் பொறுப்பு என அப்பகுதிவாசி ரிதாமி ஜபாரி வலியுறுத்தினார்.
"ஒவ்வொரு குடியிருப்பாளரும் தங்கள் குப்பைகளை உரிய இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும். ஜன்னல்கள் வழியாகவோ அல்லது பொருத்தமற்ற இடங்களிலோ குப்பைகளை வீசுவதைத் தவிர்த்தால் மட்டுமே, நாம் வாழும் சூழலை அழகாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க முடியும்," என்றார்.
முன்னதாகப், பழுதடைந்த மின்தூக்கிகள் உட்பட, பிபிஆர் லெம்பா சுபாங் 1-இல் உள்ள அடிப்படை வசதிகளைப் பழுதுபார்க்க 1.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
2025 பிப்ரவரி 13-ஆம் தேதி அப்பகுதிக்கு வருகை மேற்கொண்டபோது, பழுதுபார்க்கும் பணிகளை விரைவுபடுத்தவும், வசதிகள் மீண்டும் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்யவும் இந்த அவசர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
லெம்பா சுபாங் பிபிஆர் குடியிருப்பில் குப்பைகள் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு
8 ஏப்ரல் 2026, 7:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
லெம்பா சுபாங் 1 பிபிஆர் வீடுகளின் வாடகை உயர்வு குறித்து மறுபரிசீலனை - சிலாங்கூர் அரசு
Shalini Rajamogun, Yasmin Ramlan
18 மே 2026

selangor
சிலாங்கூரில் உள்ள சுமார் 100 பாரம்பரிய கிராமங்களில் இன்னும் முறைப்படுத்தப்பட்ட திடக்கழிவு சேகரிப்பு சேவை வழங்கப்படவில்லை
Shalini Rajamogun
28 ஏப்ரல் 2026

selangor
சட்டவிரோதக் குப்பைத் தளம் கண்டுபிடிப்பு: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது
Shalini Rajamogun
27 ஏப்ரல் 2026

selangor
குப்பை சேகரிப்பில் அலட்சியம் வேண்டாம்: 'ஸ்மார்ட்' கழிவு மேலாண்மை முறையை அமல்படுத்த பரிந்துரை
Shalini Rajamogun, Siti Rohaizah Zainal
24 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




