ஷா ஆலாம், ஏப்ரல் 24: சிலாங்கூர் மக்கள் பயிற்சித் திட்டத்தின் (PTRS) பயிலரங்கு தொகுதி இலவசமாக வழங்கப் படுகிறது, எனவே அதனை எந்த ஒரு தளத்திலும் விற்கக்கூடாது.சில தரப்பினர் இத்தொகுதியை விற்பனை செய்யும் செயல் நெறிமுறையற்றது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளையின் (MBI) தலைவர் அகமட் அஸ்ரி ஜைனல் நோர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
"ஷோப்பி போன்ற மின்-வர்த்தக தளங்களுக்கு நாங்கள் பலமுறை இது குறித்துத் தெரிவித்த போதிலும், ஒரு கடை மூடப் பட்டால், மற்றொரு கடை வேறு தளத்தில் தோன்றுகிறது."
"எனவே, இந்தப் பயிலரங்கு தொகுதி தேவைப் படுபவர்கள், தயவுசெய்து ptrs.my என்ற இணையதளத்தில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். அதை வாங்கத் தேவையில்லை."
"இத்தொகுதி சிலாங்கூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், மலேசியா முழுவதும் உள்ள அனைவரும் இலவசமாக அணுகலாம். சிலாங்கூரின் தயாரிப்புகளின் பலன்களைப் பகிர்ந்து கொண்டு அதனை விரிவுபடுத்துவதற்கான மாநில அரசின் விருப்பத்துக்கு இது இசைவாக உள்ளது," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இன்று பண்டார் சன்வே இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற பெட்டாலிங் பெர்டானா மாவட்டத்திற்கான சிலாங்கூர் மக்கள் பயிற்சித் திட்டம் (PTRS) மற்றும் டிடிக் காசே திட்டம் (PDK) 2026 பயிலரங்கு தொகுதி ஒப்படைப்பு விழாவுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
மற்றொரு நிலவரத்தில், நடுத்தர மற்றும் பலவீனமான செயல்திறன் கொண்ட (SPM) தேர்வர்களுக்கான நேருக்கு நேர் PTRS பயிற்சி வகுப்புகள் இந்த மே மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். அதே வேளையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும்.இது தவிர, திறமையான கற்றல் செயல் முறைக்கு ஆதரவாக, ePTRS என்ற இணையத்தளமும் டிஜிட்டல் கற்றல் தளமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தளம் www.eptrs.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மின்-புத்தகங்கள், கற்பித்தல் மற்றும் கற்றல் (PdP) காணொளிகள் மற்றும் இறுதி கட்ட முடுக்கக் காணொளிகள் போன்றவற்றை அணுகும் வாய்ப்பை வழங்குகிறது.




