ஷா ஆலம், ஏப்ரல் 24: சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சினையைக் கையாள்வதற்கான முயற்சிகள், மேலும் விரிவான மற்றும் பயனுள்ள அணுகுமுறையுடன் வலுப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் செயல் படுத்தப் படும் ஒவ்வொரு திட்டமும் உண்மையாக பலனளிப்பதுடன், பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் திறன் கொண்டவையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர், டானியல் அல்-ரஷீத் ஹரோன், தற்போது செயல் படுத்தப் படும் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டமும், குறிப்பாக அதன் நீடித்துழைக்கும் தன்மை மற்றும் குறைந்தது 20 ஆண்டுகளுக்கான செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார்.
"இதுவரை, மேற்கொள்ளப்பட்ட தீர்வுகள் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து நான்காகக் குறைத்துள்ளன. சில பகுதிகளில் 1.5 மில்லியன் ரிங்கிட் செலவில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டது இதற்கு ஒரு காரணமாகும்."
"இருப்பினும், சம்பந்தப்பட்ட அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய ஒரு முழுமையான தீர்வு தேவை. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது அடுத்த 20 ஆண்டுகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, 15 ஆவது சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் நான்காவது தவணையின் முதல் கூட்டத் தொடக்க விழாவின் போது, சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ், வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க சிறந்த திட்டமிடல் மற்றும் பயனுள்ள நடவடிக்கைகள் மூலம் முழு கவனம் செலுத்துமாறு மாநில அரசாங்கத்திற்கு மீண்டும் அறிவுறுத்தினார்.
நீண்டகாலமாகத் தொடரும் வெள்ளப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வைக் காண, நெதர்லாந்து போன்ற நாடுகளின் அனைத்துலக ஆலோசனைகளையும் நிபுணத்துவத்தையும் பெறுமாறு மாட்சிமை தங்கிய சுல்தான் இதற்கு முன் பலமுறை மாநில அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
திட்டங்களும் நடவடிக்கைகளும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், ஒவ்வொரு செல்கேர் கிளினிக்கிலும் பேச்சு சிகிச்சை சேவைகளை வழங்க வேண்டும் என்றும் டானியல் பரிந்துரைத்தார்.
"தற்போது, இச்சமூகப் பிரச்சினைக்கு நிபுணர்களின் உதவி தேவைப்படுகிறது. செல்கேர் கிளினிக்குகளில் இந்தச் சிகிச்சையை அமைப்பது அந்தக் குழந்தைகளுக்கு உதவும்."
"நோய் கண்டறியப்பட்ட வழக்குகளுக்காகக் காத்திருக்காமல், அனைத்து செல்கேர் கிளினிக்குகளிலும் இந்தச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்," என்று அவர் கூறினார்.
சிலாங்கூரில் வெள்ளப் பிரச்சினையைக் கையாள்வதற்கான முயற்சிகள், மேலும் விரிவான மற்றும் பயனுள்ள ரீதியில் அணுக- பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் அழைப்பு
24 ஏப்ரல் 2026, 3:41 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




