கோலாலம்பூர், ஏப்ரல் 22 - உள்நாட்டுப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சிகளில் வங்கி நிறுவனங்கள் வியூகப் பங்காளிகளாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மலேசியாவின் பொருளாதார அடித்தளம் மீள் தன்மையுடன் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (கு.சி.ந.நி.) உட்பட முக்கியத் துறைகள் எதிர்கொள்ளும் அழுத்தங்களைக் கையாள்வதில் ஏற்படும் எந்தவொரு தாமதத்தையும் அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட கு.சி.ந. நிறுவனங்களுக்காக வங்கித் துறை மூலம் 5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிறப்பு நிதி வசதி வழங்கப்படும் என்று நிதி அமைச்சருமான அன்வார் அறிவித்திருந்தார்.
இந்த நிதி வசதியானது, முன்னர் அறிவிக்கப்பட்ட சியாரிகாட் ஜாமினான் பெம்பியாயான் பெர்னியாகான் பெர்ஹாட் (SJPP) கீழ் வழங்கப்படும் 5 பில்லியன் ரிங்கிட் உத்தரவாதத்துடன் கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், கு.சி.ந. நிறுவனங்களுக்கான மொத்த நிதி ஆதரவு இப்போது 10 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
"உண்மையிலேயே தேவைப்படும் புதிய கு.சி.ந. நிறுவனங்கள் உட்பட, இந்த நிதி வசதிக்கான அணுகல் நியாயமாகவும் விரிவாகவும் விரிவாக்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். வங்கி நிறுவனங்கள் குறுகிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்காமல், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் வியூகப் பங்காளிகளாகப் பொறுப்பேற்க வேண்டும்."
"உள்ளூர் வணிகங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வேலைவாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கவும், நாட்டின் பொருளாதாரம் நிலையானதாகவும் மீள்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யவும் மடாணி அரசாங்கம் உறுதியான, ஒழுக்கமான மற்றும் தெளிவான முன்னுரிமைகளுடன் தொடர்ந்து செயல்படும்," என்று அன்வார் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் மேற்கு ஆசிய மோதல்களால் உலக விநியோகச் சங்கிலி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், குறிப்பிடத்தக்க அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள கு.சி.ந. நிறுவனங்களுக்கு உதவ, மிகவும் உறுதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, பிரதமர் இன்று வங்கி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடல் அமர்வை நடத்தினார்.
உள்நாட்டுப் பொருளாதார நிலைத்தன்மைக்கு வங்கி நிறுவனங்கள் வியூகப் பங்காளிகளாக இருக்க வேண்டும் - பிரதமர் அன்வார்
22 ஏப்ரல் 2026, 4:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





