சண்டாக்கான், ஏப்ரல் 22 – இங்குள்ள கம்போங் பஹாகியாவில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபகற்ப மலேசியாவிலிருந்து ஆதரவும் உதவிகளும் தொடர்ந்து வருவதால், தென் சீனக் கடலைக் கடந்து மலேசியர்களின் ஒற்றுமையும் அக்கறையும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
தீபகற்பத்தைச் சேர்ந்த தனது பல நண்பர்கள் நேரடியாகக் களமிறங்கி உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த போது, இந்த அக்கறையைத் தன்னால் காண முடிந்ததாக ‘கெபாஜிக்கான் மர்ஹேன் சண்டாக்கான்’ எனும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதி முகமது காதிர் அப்துல் ஜாலில் கூறினார்.
"எனது நண்பர்களில் ஒருவர் உடனடியாக என்னைத் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பயன்படும் வகையில் 30 கூடாரங்களை நன்கொடையாக வழங்கினார். இந்த நடவடிக்கை மலேசியர்களாகிய நமது உணர்வைக் காட்டுகிறது," என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள கம்போங் பஹாகியா நீர்நிலைக் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ விபத்தில், சுமார் 1,000 வீடுகள் அழிந்தன. இது நான்கு ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவை உள்ளடக்கியதாகும்.
பாதிக்கப் பட்டவர்களில் சிலர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க விரும்பாமல், தங்கள் வீடுகள் இடிந்து விழுந்த இடங்களிலேயே தங்கியிருப்பதாக கூடாரங்களுக்கான தேவை மிகவும் அவசரமாக உள்ளது என்று முகமது காதிர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர்கள் வெறும் பாய்களில் வானத்தைப் பார்த்தபடி உறங்குகிறார்கள். இந்த மனிதாபிமானமற்ற நிலையைக் கண்டு, பல பொதுத் தரப்பினர் தகுந்த உதவிகளை வழங்க முன்வந்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
வான் என்று நண்பர்களிடையே அறியப்படும் முகமது காதிர், தனது குழுவினர் சம்பவம் நடந்த முதல் நாளிலிருந்தே பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட உணவு மற்றும் பானங்களை விநியோகித்து வருவதாகக் கூறினார். மாலையில் 140 அட்டைப்பெட்டி மினரல் வாட்டர் மற்றும் 300 பொட்டலம் ரொட்டிகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
அன்றிரவும் இந்த முயற்சி தொடர்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக 300 பொட்டலம் உணவுகளை அவர்கள் கொண்டு வந்தனர்.
"நேற்று, உள்ளூர் உணவக உரிமையாளர்கள் உட்பட பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 1,000-க்கும் மேற்பட்ட ரொட்டி மற்றும் தண்ணீர் பொட்டலங்கள் இந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டன," என்றார் அவர்.
உணவுப் பொட்டலங்கள் விநியோகிப்பதைத் தவிர, சியாங்-சியாங் சண்டாக்கான் உணவகம் தீ விபத்து நடந்த இடத்திலேயே நேரடியாகச் சமைத்து வழங்கும் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பை (CSR) நிறைவேற்றி இந்த உன்னத முயற்சிக்கு ஆதரவளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து விட்டதாலும், சமைப்பதற்கான எந்த உபகரணங்களும் இல்லாததாலும், களத்தில் சமைக்கும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அந்த உணவகத்தின் பிரதிநிதி முகமது அதா ஷரிபுடின், 28, கூறினார்.
"இன்று காலை, நாங்கள் வறுத்த நூடுல்ஸ், முட்டை மற்றும் சூடான பானங்களைத் தயாரித்தோம். இங்கு நேரடியாக சமைப்பதற்காக 100 கிலோகிராம் நூடுல்ஸ் மற்றும் 40 பெட்டி முட்டைகளைக் கொண்டு வந்தோம்," என்ற அவர், மதிய மற்றும் இரவு உணவிற்கு வெவ்வேறு உணவு வகைகள் தயாரிக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையில், ஒரு தனியார் நிறுவனத்தின் பிரதிநிதியான அல்தோமி ஜுல் டோங், 49, பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 200 மூட்டை அரிசி மற்றும் உணவுப் பொருட்களை நன்கொடையாக வழங்க அந்த இடத்திற்கு வந்திருந்தார்.
"பாதிக்கப்பட்ட மக்களுக்காக இது எங்களின் பங்களிப்பு. இந்த உதவி அவர்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்," என்றார்.
பெர்னாமா வின் ஆய்வில், பல்வேறு தரப்பினர் ஆடை மற்றும் சிறு குழந்தைகளின் தேவைகளை வழங்கி வருவதைக் காண முடிந்தது. அதே நேரத்தில், கபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கட்சியின் செக்கோங் பிரிவு, பாதிக்கப்பட்டவர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் 10 தற்காலிகக் கழிப்பறைகளைக் கட்டும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சண்டாக்கான் தீ விபத்து: தென் சீனக் கடலைக் கடந்த ஒற்றுமை உணர்வு
22 ஏப்ரல் 2026, 2:30 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?


