கோலாலம்பூர், ஏப்ரல் 21: ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் பிராந்தியத்தின் கடற்கரையில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், சிறிய இடையூறுகளைத் தவிர, மலேசியர்கள் யாரும் கடுமையாக பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சு, உள்ளூர் நேரப்படி மாலை 4.53 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிந்தைய நிலவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
"மலேசிய தூதரகம் ஜப்பானிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன், மலேசிய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக அவர்களைத் தீவிரமாகத் தொடர்பு கொண்டு வருகிறது," என்று அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"வெளியுறவு அமைச்சு இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தகவல்கள் உறுதிசெய்யப் பட்டவுடன் அவ்வப்போது கூடுதல் விவரங்களை வழங்கும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
திங்களன்று ஜப்பானின் வடகிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளை 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாக கியோடோ செய்தி நிறுவனம் கூறியது.
மூன்று மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் என்ற கணிப்புடன், கடலோரப் பகுதிகளுக்கு ஜப்பானிய அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலைமை இன்னும் சீராகவில்லை, உள்ளூர் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் சுனாமி அபாயத்தை மதிப்பிட்டு வருகின்றனர்.
ஜப்பானில், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள், எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கடற்கரைக்கு அருகில் இருந்தால் உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும், ஜப்பானிய அதிகாரிகள் வழங்கும் வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறும் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தகவல்கள் மற்றும் தூதரக உதவிகளை எளிதாக வழங்குவதற்காக, மலேசியர்கள் https://ekonsular.kln.gov.my என்ற இ-கன்சுலர் தளம் மூலம் தங்கள் தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து புதுப்பிக்குமாறு அமைச்சு ஊக்குவிக்கிறது.
உடனடி தூதரக உதவி அல்லது அவசரச் சூழ்நிலைகளுக்கு, மலேசியர்கள் டோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: +81-3-3476-3840 / +81-3-3476-4971 (பொது விசாரணைகள்), அவசரத் தொடர்பு: +81-80-4322-3366, அல்லது mwtokyo@kln.gov.my / consular.tyo@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
-- பெர்னாமா
ஜப்பானில் நிலநடுக்கம்: மலேசியர்கள் யாரும் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை
21 ஏப்ரல் 2026, 1:36 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




