ஷா ஆலாம், ஏப்ரல் 14: விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றத் தவறும் நபர்கள், 3 மில்லியன் ரிங்கிட் வரையிலான அபராதம் உட்பட கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என்று சிலாங்கூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தில் எரிபொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினருடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என சிலாங்கூர் KPDN தலைமை அமலாக்க அதிகாரி முகமது ஹனிசாம் கெச்சிக் வலியுறுத்தினார்.
"விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்றத் தவறும் தரப்பினர் மீது சிலாங்கூர் KPDN சமரசம் செய்து கொள்ளாது. சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அவர் கூறினார்.
"1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் (சட்டம் 122)-இன் கீழ் குற்றம் செய்யும் தனிநபர்களுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 மில்லியன் ரிங்கிட்டிற்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படலாம். அடுத்தடுத்த குற்றங்களுக்கு 3 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதல் குற்றத்திற்கு 2 மில்லியன் ரிங்கிட் வரையிலும், மீண்டும் மீண்டும் செய்யும் குற்றங்களுக்கு 5 மில்லியன் ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படலாம் என்று அவர் மேலும் விளக்கினார்.
இதற்கிடையில், ‘ஓப்ஸ் டிரிஸ் 4.0’ மூலம் 476 சோதனைகள் மேற்கொள்ளப் பட்டதாக முகமது ஹனிசாம் கூறினார். இதில் 453 பெட்ரோல் நிலையங்கள், 20 எரிபொருள் மொத்த விற்பனையாளர்கள், கட்டுப்பாட்டுப் பொருட்களுக்கான அனுமதி பெற்ற ஒரு சில்லறை விற்பனைக் கடை மற்றும் இரண்டு சட்டவிரோத சேமிப்புக் கிடங்குகள் அடங்கும்.
"இந்தச் சோதனைகளின் விளைவாக, இரண்டு சட்டவிரோத சேமிப்புக் கிடங்குகள், ஒரு வன்பொருட்கள் கடை, ஒரு பெட்ரோல் நிலையம் மற்றும் மூன்று எரிபொருள் மொத்த விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன."
"ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை செயல்படுத்தப் பட்டதிலிருந்து, ஓப்ஸ் டிரிஸ் 4.0-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 70,000 ரிங்கிட்டை எட்டியுள்ளது," என்று அவர் கூறினார்.
இம்மாநிலத்தில் மானிய டீசல் கட்டுப்பாட்டுத் திட்டம் (SKDS) மற்றும் மீனவர்களுக்கான மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் தரப்பினரின் ‘ஃப்ளீட் கார்டு’ (Fleet Card) ஒப்புதல்களை ரத்து செய்ய அல்லது இடைநிறுத்தம் செய்ய சிலாங்கூர் KPDN பரிந்துரைக்கும் என்று அமைச்சு மேலும் வலியுறுத்தியது.
எரிபொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு 3 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம்
14 ஏப்ரல் 2026, 9:20 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
20 ஏப்ரல் 2026

selangor
ஆறு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
17 ஏப்ரல் 2026

selangor
ஜெராம், மேரு உட்பட ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
16 ஏப்ரல் 2026

selangor
ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
15 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




