கோலாலம்பூர், ஏப்ரல் 14: கிளாந்தான், பாச்சோக்கில் உள்ள டாருல் உலும் முஹம்மதியா மதப் பள்ளியில் (SMU) ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு (KPM), பிரதமர் துறை அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU JPM) மற்றும் தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அன்வார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப் பட்ட மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களது கற்றல் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதையும் உறுதி செய்வதே தற்போதைய முன்னுரிமை என்று பிரதமர் கூறினார்.
"மடாணி அரசாங்கம் தேவையான உதவிகளைத் துரிதப்படுத்தும். மேலும், சீரமைப்புப் பணிகளை விரைவு படுத்துவதற்கும், இந்தப் பள்ளி மீண்டும் வழக்கம் போல் செயல் படுவதை உறுதி செய்வதற்கும் அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயல்படும்."
"நான் முன்பு வலியுறுத்தியதைப் போலவே, கல்வி கற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நலன் ஆகியவையே எப்போதும் அரசாங்கத்தின் முதன்மை இலக்காக இருக்கும்," என்று அவர் கூறினார்.
1990-இல் நிறுவப்பட்ட இப்பள்ளியின் கல்வித் தொகுதி, மேற்பார்வையாளர் அறை மற்றும் ஆண் மாணவர் தங்குமிடம் என மூன்று கட்டிடத் தொகுதிகள் தீயில் முற்றிலுமாக சேதமடைந்தன. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பள்ளியின் துப்புரவுப் பணிகள், மின்சார வயரிங் மற்றும் நீர் விநியோக இணைப்பு உள்ளிட்ட அடிப்படை பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கல்வி அமைச்சு 100,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக நேற்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
கிளாந்தான், பாச்சோக் டாருல் உலும் முஹம்மதியா மதப் பள்ளியில் (SMU) தீ, பிரதமர் ஊடனடி நடவடிக்கைக்கு உத்தர
14 ஏப்ரல் 2026, 8:56 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




