பினாங்கு அனைத்துலக சரக்குப் போக்குவரத்து ஏரோபார்க் (PILA) திட்டத்திற்கான நில வேலைகள் மற்றும் நில சீரமைப்புப் பணிகள்  நடைபெறுகிறது  

14 ஏப்ரல் 2026, 8:54 AM
பினாங்கு அனைத்துலக சரக்குப் போக்குவரத்து ஏரோபார்க் (PILA) திட்டத்திற்கான நில வேலைகள் மற்றும் நில சீரமைப்புப் பணிகள்  நடைபெறுகிறது  

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு அனைத்துலக சரக்குப் போக்குவரத்து ஏரோபார்க் (PILA) திட்டத்திற்கான நில வேலைகள் மற்றும் நில சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் முதல் கட்டமாக, சுதந்திர வர்த்தக மண்டலத் தகுதியுடைய விமான சரக்கு கிடங்கு 2029-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பட்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இத்திட்டத்திற்கான திட்டமிடல் அனுமதி பெருந்திட்டம் (Planning Permission Master Plan) ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் திட்டமிட்டபடி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளதாகவும் முதல்வர் சௌ கோன் இயோவ் கூறினார்.

"ஒட்டுமொத்தமாக, PILA திட்டம் 2050-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 500,000 டன் சரக்குகளைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இதற்காக இரண்டு மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான கிடங்குப் பகுதி உருவாக்கப்படும்," என்றார்.

"முதல் கட்டத்தில், உருவாக்கப்படும் விமான சரக்கு கிடங்கு, கூடுதலாக ஆண்டுக்கு 100,000 டன் சரக்குகளைக் கையாளும் திறனை வழங்கும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

PILA என்பது, புதிய சரக்கு முனையத்தை உருவாக்கி, வடக்கு மண்டலத்தின் சரக்குப் போக்குவரத்து சூழல் அமைப்பை வலுப் படுத்தவும், மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திற்கும் (PDC) மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டிற்கும் (MAHB) இடையிலான ஒரு மூலோபாயக் கூட்டு முயற்சியாகும்.

பினாங்கு 2030 தொலை நோக்குப் பார்வை, மாநிலக் கட்டமைப்புத் திட்டம் 2030 மற்றும் பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு ஏற்ப, எதிர்காலத்தில் குறைக்கடத்தி மற்றும் மின், மின்னியல் (E&E) தொழில்களின் சரக்குப் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்த ஒத்துழைப்பு முக்கியமானது என்று சௌ கூறினார்.

உள்நாட்டு மற்றும் அனைத்துலக சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து வாடகைக்கான கடப்பாடுகளைப் பெற்றுள்ள PILA-வின் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இவ்விழாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.