கோலாலம்பூர், ஏப்ரல் 14: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை அடுத்து, பொதுமக்கள் பீதி அடைந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நாட்டில் அடிப்படைப் பொருட்களின் கையிருப்பு போதுமானதாகவும், கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஷஹ்ரான் முகமட் அர்ஷாட், மோதல் நிலவும் இக்காலத்தில் பொருட்களின் விலைகளை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து மேற்பார்வையிடும் என்று கூறினார்.
"தினசரி அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு போதுமானதாகவும் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும் கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தக அமைச்சு உத்தரவாதம் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.
"விநியோகச் சங்கிலி தொடர்வதை உறுதிசெய்ய, கோலாலம்பூரில் உள்ள 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பொருட்களின் இருப்பு விரிவாகக் கண்காணிக்கப்படுகிறது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தலைநகர் முழுவதும் பொருட்களின் இருப்பு மற்றும் விலைகளைக் கண்காணிக்க, கோலாலம்பூர் KPDN-இன் 168 அமலாக்க அதிகாரிகளும் விலை கண்காணிப்பு அதிகாரிகளும் தொடர்ந்து களத்தில் இறங்கியுள்ளதாக அவர் கூறினார்.
சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் எப்போதும் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, கோலாலம்பூர் KPDN, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சில்லறை விற்பனையாளர்கள் (DDR) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மொத்த விற்பனையாளர்களை (DDW) நியமித்து கண்காணித்து வருவதாகவும் முகமட் ஷஹ்ரான் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மையங்கள் போன்ற முக்கிய வழித்தடங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமானதாக இருப்பதை உறுதிசெய்ய, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடன் அமைச்சு கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
"அதே நேரத்தில், கட்டுப்பாட்டுப் பொருட்களின் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த 'ஓப்ஸ் டிரிஸ் 4.0' தொடர்ந்து பலப்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.
எனவே, பொதுமக்களிடையே தேவையற்ற கவலையை ஏற்படுத்தக்கூடிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று அவர் நுகர்வோருக்கு அறிவுறுத்தினார்.
"தங்கள் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் தொடர்பான ஏதேனும் சிக்கல்களைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோலாலம்பூர் KPDN-க்கு நேரடியாகப் புகாரளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களை வாங்கி குவிக்க வேண்டிய அவசியமில்லை , நாட்டில் அடிப்படைப் பொருட்களின் கையிருப்பு போதுமானதாக இருப்பதாக உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது
14 ஏப்ரல் 2026, 3:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
ரவாங், செமினி, சுங்கை ரமால் உட்பட ஆறு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
14 ஜூலை 2026

selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை 6 இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
13 ஜூலை 2026

selangor
மேரு, டெங்கில், செமினி உட்பட ஆறு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
8 ஜூலை 2026

selangor
ஐந்து இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
7 ஜூலை 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



