ஷா ஆலம், ஏப்ரல் 8 – மற்ற நிறுவனங்களின் வணிக முத்திரைகள் அல்லது அடையாளங்களை (Trademarks) சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி வந்த வணிக வளாகங்கள் மீது, சிலாங்கூர் உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), மலேசிய நிறுவன ஆணையத்துடன் (SSM) இணைந்து சோதனையை நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது 2019-ஆம் ஆண்டு வணிக முத்திரைச் சட்டத்தின் கீழ் (Akta Cap Dagangan 2019) மேல் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிலாங்கூர் KPDN அறிவித்துள்ளது.
இது குறித்துத் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்த அமைச்சு, உரிய அனுமதியின்றி ஒரு வணிகத்தின் அடையாளத்தையோ அல்லது முத்திரையையோ பயன்படுத்துவது நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும் என்று சாடியுள்ளது. அதோடு, இது உண்மையான உரிமையாளர்களின் அறிவுசார் சொத்துரிமையை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மற்றொருவரின் வணிக நற்பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, குறுக்கு வழியில் லாபம் ஈட்ட முயலும் எந்தத் தரப்பினருடனும் தாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே, வணிகர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதோடு, சட்டப்பூர்வமான அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்க்கத் தங்களின் வணிக முத்திரைகளை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் 2019-ஆம் ஆண்டு வணிக முத்திரைச் சட்டம் (சட்டம் 815), வணிக அடையாளங்களைப் பதிவு செய்வதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும், அனுமதியின்றி முத்திரைகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்கிறது. சந்தையில் ஒரு பொருளின் தனித்துவத்தைப் பேணவும், வணிக அடையாளத்தைப் பாதுகாக்கவும் இந்தச் சட்டம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.








