ஷா ஆலம், ஏப்ரல் 7: தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (யுபிஎஸ்ஐ) விளையாட்டு வளாகத்தில் பூட்டப் பட்டிருந்த கிடங்கில் சிக்கி, பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
யுபிஎஸ்ஐ விளையாட்டு அரங்கில் (UPSI Sport Bowl) உள்ள சுத்திகரிப்புக் கருவிகள் வைக்கப் பட்டிருந்த கிடங்கில், 53 வயதான அந்த ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பிரிவு உதவி இயக்குநர், சபரோட்ஸி நூர் அஹ்மட் கூறுகையில், அதிகாலை 1.57 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.பூட்டப்பட்டிருந்த கிடங்கின் கதவைத் திறக்க காவல்துறைக்கு உதவும்படி அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
"இதையடுத்து, தஞ்சோங் மாலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அதிகாலை 2.07 மணியளவில் அங்கு சென்றடைந்தபோது, யுபிஎஸ்ஐ துணைப் போலீசாரால் கிடங்கின் கதவு ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரி, பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினார் என சபரோட்ஸி மேலும் தெரிவித்தார்."உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கை அதிகாலை 2.36 மணியளவில் முழுமையாக முடிவடைந்தது," என்று அவர் கூறினார்.இந்த நடவடிக்கையில் ஒன்பது தீயணைப்பு வீரர்கள், ஒரு ஃபயர் ரெஸ்க்யூ டெண்டர் (FRT) வாகனம் மற்றும் அவசரகால மருத்துவ மீட்புச் சேவை (EMRS) பிரிவினர் ஈடுபட்டனர்.:




