கோலாலம்பூர், ஏப்ரல் 6 – மலேசியாவின் மிகச்சிறந்த மற்றும் செல்வாக்குமிக்க ஒலிபரப்புச் செய்தியாளர்களில் ஒருவரான கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிள்ளானில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 67 ஆகும்.
இச்சோகமான செய்தியை அவரது சகோதரரும், மீடியா பிரைமா பெர்ஹாட் (Media Prima Berhad) செய்தி மற்றும் நடப்பு விவகாரப் பிரிவின் குழும நிர்வாக ஆசிரியருமான ஜஸ்பந்த் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
1959-ஆம் ஆண்டு பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானில் ஒரு காவல்துறை குடும்பத்தில் பிறந்த கரம் சிங், தனது தனித்துவமான செய்தி வாசிப்பு பாணியால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
கடந்த 1995-ஆம் ஆண்டு டிவி3 (TV3) தொலைக்காட்சியில் தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கிய அவர், குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த புகார்களைத் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்.
அவரது செய்திகளில் இடம்பெறும் பழமொழிகளும், ஆழமான தமிழ் மற்றும் மலாய் மொழிப் பயன்பாடும் நேயர்களைப் பெரிதும் கவர்ந்தன. உடல்நலக் குறைவு காரணமாக 2014-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனது சிறந்த பணிக்காக ‘அனுகேரா ஸ்ரீ அங்காசா’ (Anugerah Seri Angkasa) விருதினை இரண்டு முறையும், சிறந்த சுற்றுச்சூழல் செய்தியாளருக்கான மலேசிய பத்திரிகை நிறுவன (MPI) விருதினை 2004 முதல் 2007 வரை தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளும் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், அவரது பங்களிப்பைப் போற்றும் வகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘தபுங் காசி ஹவானா’ (Tabung Kasih @HAWANA) நிதி உதவியும் அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




