பட்டர்வர்த், ஏப்ரல் 2: பினாங்கில் இவ்வருடம் ஜனவரி முதல் 'ஓப்ஸ் டிரிஸ் 4.0' நடவடிக்கை கீழ் டீசல் முறைகேடு தொடர்பாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் RM415,877 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
இந்த வழக்குகள் அனைத்தும் செபராங் பிறை செலாத்தான் (SPS) பகுதியில் எரிபொருள் சேமிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதக் கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளை உள்ளடக்கியது என்று மாநில KPDN இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட உள்ளூரைச் சேர்ந்த ஐந்து லோரி ஓட்டுநர்கள் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961-இன் கீழ் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் இன்னும் விசாரணை மற்றும் குற்றச்சாட்டு நிலையில் உள்ளன.
"இதே காலகட்டத்தில், தொடர்ச்சியான அமலாக்க மற்றும் கண்காணிப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக மாநிலத்தில் 215 பெட்ரோல் நிலையங்கள் சோதனையிடப்பட்டன," என்று சுங்கை டூவா பெட்ரோனாஸ் நிலையத்தில் RON 95 பெட்ரோல் விற்பனை மற்றும் கொள்முதல் தடை தொடர்பான கண்காணிப்புக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று முதல் அமலுக்கு வந்த வெளிநாட்டுப் பதிவு கொண்ட வாகனங்களுக்கு RON95 பெட்ரோல் விற்பனை மற்றும் கொள்முதல் மீதான தடையை முழுமையாகப் பின் பற்றுவதை உறுதி செய்வதற்காக 126 பெட்ரோல் நிலையங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப் பட்டு வருவதாக அவர் கூறினார்.
மானியம் பெற்ற எரிபொருள் விற்பனையில் நடந்த முறைகேடுகள் குறித்து இதற்கு முன்னர் நான்கு பொதுப் புகார்கள் கிடைத்ததாகவும் ஜெகன் குறிப்பிட்டார். அவற்றில் இரண்டு, கொள்கலன்களில் RON95 பெட்ரோலை நிரப்பியது தொடர்பாகவும், மற்ற இரண்டு பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்தும் இருந்தன.
"விசாரணையின் முடிவில், மூன்று புகார்கள் ஆதாரமற்றவை என தெரியவந்தது. டீசல் சம்பந்தப்பட்ட ஒரு புகார் மட்டும் பினாங்கு KPDN-இன் தொடர் கண்காணிப்பில் உள்ளது," என்றார்.
தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், எல்லைப் பகுதிகளில் கட்டுப் பாடுகளை வலுப்படுத்த, 134 அதிகாரிகளை முக்கிய இடங்களில் நிறுத்துதல், ரோந்து, உளவு மற்றும் பிற அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் KPDN தனது தயார் நிலையை அதிகரித்துள்ளது.
மானியம் பெற்ற எரிபொருள் விநியோகத்தை நன்கு கட்டுப்படுத்தி, தகுதியுள்ளவர்கள் மட்டுமே பயனடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
RON95 பெட்ரோலை உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமே நிரப்ப அனுமதிக்கப்படுவதை உறுதி செய்வது பெட்ரோல் நிலைய உரிமையாளர்-களின் பொறுப்பாகும். இந்த முறைகேட்டிற்கு வழிவகுக்கும் எந்தவொரு கவனக்குறைவு அல்லது செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
பினாங்கில் ஐந்து லோரி ஓட்டுநர்கள் விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1961-இன் கீழ் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்
2 ஏப்ரல் 2026, 6:31 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை நாளை ஏழு இடங்களில் தொடரும்
Shalini Rajamogun
20 மே 2026

national
'ஃப்ளீட் கார்டு' பயன்படுத்தி மானிய டீசல் முறைகேடு - இருவர் கைது
Shalini Rajamogun
20 மே 2026

selangor
ஏழு இடங்களில் நாளை மலிவு விற்பனை தொடரும்
Shalini Rajamogun
19 மே 2026

selangor
ஆறு இடங்களில் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை ஏற்பாடு
Shalini Rajamogun
18 மே 2026

உங்கள் கருத்து என்ன?




